தமிழ்நாட்டில் மட்டும் இரட்டை வரி! ஒரே நாடு ஒரே வரி எல்லாம் சும்மாவா பிரதமரே? விஷால் குற்றச்சாட்டு
சென்னை: நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராக உள்ளவருமான விஷால் திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் பல்வேறு சமூக நிகழ்வுகளுக்கும் கருத்து தெரிவித்து வருகின்றார். நடிகராக மட்டும் இல்லாமல், இவர் படங்களைத் தயாரித்தும் வருகின்றார். இவர் விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றார்.
மேலும் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் எதுவுமே சரியாகப் போகவில்லை. குறிப்பாக ஹரி இயக்கத்தில் வெளியான ரத்னம் படம் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை நடிகர் விஷால் சந்தித்தார்.

அந்த சந்திப்பின்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. குறிப்பாக மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் மீது உங்களின் எதிர்பார்ப்பு என்ன என்ற கேள்வி செய்தியாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டது . அதற்கு பதில் அளிக்கையில் தமிழ்நாட்டில் இரட்டை வரி வசூல் செய்வதாக குற்றம் சாட்டினர்.
இரட்டை வரி: அதாவது, “தமிழ்நாட்டில் வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறித்து மத்திய அரசு ஆராய வேண்டும் என பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொள்கிறேன். இதற்கான முக்கிய காரணம் இந்தியாவில் இரட்டை வரி வசூலிக்கும் ஒரே மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ’ஒரே நாடு ஒரே வரி’ என பிரதமராகி நீங்கள் கூறியபோது நான் உங்களை நம்பினேன், ஆனால் எதற்காக தமிழ்நாட்டில் மட்டும் இப்படி இரட்டை வரி வசூலிக்கப்படுகின்றது? ஏன் யாருமே இந்த விவரகாரம் குறித்து கேள்வி எழுப்பாமல் உள்ளனர்? இந்த இரட்டை வரி முறையினால் திரையுலகம் மிகவும் மோசமாக பாதிப்பைச் சந்தித்து வருகின்றது. குறிப்பாக தயாரிப்பாளர்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.
ரத்தம் வடிக்கும் திரையுலகம்: 8% அதிகமாக உள்ளாட்சி வரி செலுத்துவது அனைத்துத் தயாரிப்பாளர்களுக்கும் பெரிய சுமையாக உள்ளது. இப்படியன இரட்டை வரிகளால் திரையுலகம் ரத்தம் சிந்திக் கொண்டுள்ளது. இந்த வருடம் திரையுலகிற்கு மிக மோசமான வருடங்களில் ஒன்றாக அமைந்துள்ளாது. அந்த வலியை இந்திய திரையுலகம் வெளியே காட்டுவதில்லை. ஏனென்றால் அவர்கள் அதை தங்களுக்குள்ளே மறைத்துவைத்துக் கொண்டு, தங்கள் இழப்புகளைப் பற்றி பேசாமல் அமைதியாக இருக்கின்றார்கள். மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் மூலம் அனைவரும் இயல்பான வாழ்க்கையை வாழ வாய்ப்பு ஏற்படுத்தப்படவேண்டும்.
பிரதமரை நம்புகின்றேன்: திரைத்துறையில் உள்ள நாங்கள் ஆடம்பர வாழ்க்கையைக் கேட்கவில்லை. வசதியான காரையோ வசதியான வீட்டையோ உங்களிடம் கேட்கவில்லை. நான் பிரதமர் மோடியை முழுமையாக நம்புகிறேன். நீங்கள் எதிர்காலத்திற்கான சிறந்த பட்ஜெட்டை வழங்குவீர்கள். ஒவ்வொரு குடிமகனுக்கும் பயனளிக்கும் வகையில் பட்ஜெட் இருக்கும் என நம்புகிறேன்” என நடிகர் விஷால் பதில் அளித்தார்.
பட்ஜெட் தாக்கல்: பிரதமர் மோடி தலைமையிலான புதிய ஆட்சி 2024ஆம் ஆண்டு மக்களவைப் பொதுத் தேர்தல் முடிந்த பின்னர் மத்திய அரசின் முதல் பட்ஜெட் வரும் 23ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மூன்றாவது முறையாக ஆட்சியில் அமைந்துள்ள மோடி அரசின் முதல் விரிவான பட்ஜெட் என்பதால் பல்வேறு வரி சலுகைகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என பெரும் எதிர்பார்ப்பு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் இடையே நிலவுகிறது. வரிச்சுமையை குறைத்து, பொதுமக்களிடையே பணப்புழக்கத்தை தூண்டக்கூடிய அறிவிப்புகள் இடம்பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றது. இந்நிலையில், திரைத்துறையில் உள்ள பிரச்னைகள் குறித்து நடிகர் விஷால் அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











