‘அயோக்யா’... இரும்புத்திரை வெற்றி விழாவில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட விஷால்!
இரும்புத்திரை வெற்றிவிழாவில் தமது அடுத்த படம் குறித்து நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: இரும்புத்திரை வெற்றியைத் தொடர்ந்து அயோக்யா என்ற படத்தில் அடுத்து நடிக்க இருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த படம் இரும்புத்திரை. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை விமர்சிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு, பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த போதும், மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பாக்ஸ் ஆபிசில் படம் நன்றாக வசூலிப்பதால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
படத்தின் வெற்றி விழா சென்னையில் இன்று நடைபெற்றது. நடிகர் விஷால், இயக்குனர் மித்ரன், வில்லன் பாத்திரத்தில் நடித்த அர்ஜூன், காளி வெங்கட், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டு, படத்தில் பணியாற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டனர்.

அடுத்த படம்:
நிகழ்ச்சியின்போது அடுத்த படம் குறித்து விஷாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ‘தமது அடுத்தப்படம் அயோக்யா' எனத் தெரிவித்தார். மேலும், விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என அவர் கூறினார்.

நாயகி:
இப்படத்தை அறிமுக இயக்குநர் வெங்கட் மோகன் இயக்குகிறார் எனக் கூறப்படுகிறது. இவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். இவர் ஏற்கனவே, சைத்தான் கா பச்சா மற்றும் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்துள்ளார். இது அவரது மூன்றாவது தமிழ்ப் படம்.

பட வேலைகள்:
இந்தப் படத்தை ‘லைட்ஹவுஸ் மூவி மேக்கர்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து விஷால் தனது ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' மூலம் தயாரிக்கவுள்ளார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

போலீஸ் கதாபாத்திரம்?
இதற்கிடையே இப்படம் டெம்பர் என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக் என வெளியான தகவலை படக்குழுவினர் மறுத்துள்ளனர். டெம்பர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் போலீசாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அயோக்யா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











