Actor Vishal: தொடர்கதையாகும் விஷ சாராய பலி & போதை பொருட்கள் அதிகரிப்பு.. விஷால் கடும் கண்டனம்!
சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36ஐ தொட்டுள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இந்த நிகழ்வு தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டிலும் இதேபோன்ற நிகழ்வு நடந்துள்ள நிலையில் மீண்டும் இதுபோன்றதொரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த நிகழ்வை கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், இயக்குநர் பா ரஞ்சித், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். பல கட்சித் தலைவர்களும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி சம்பவம்: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36ஐ தொட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி, விழுப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மூன்று மாதங்களுக்குள் இந்த விவகாரத்தில் இந்த விசாரணை ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்பிரபலங்கள் கண்டனம்: இந்த விவகாரத்தில் முதல் நபராக தன்னுடைய கண்டனத்தை நடிகரும் தவெக கட்சித் தலைவருமான நடிகர் விஜய் பதிவு செய்துள்ளார். கடந்த ஆண்டிலும் இதே நிகழ்வு காரணமாக பல உயிர்கள் பறிபோன நிலையில் தற்போது மீண்டும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே இயக்குநர் பா ரஞ்சித், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனும் தங்களது கண்டனங்களை பதிவிட்டுள்ளனர்.

நடிகர் விஷால் கண்டனம்: இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுவதாகவும் கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம் என்றும் கொதிப்புடன் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் விஷாலும் கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தன்னுடைய கண்டனத்தை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் விஷச் சாராயத்திற்கு பலி ஆகும் நிகழ்வும், போதைப் பொருட்கள் அதிகரித்து வருவதும் தொடர்கதையாகவே உள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
விஷால் கோரிக்கை: இந்த விவகாரத்தில் தமிழக அரசு முதற்கட்ட நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் இந்த நிகழ்விற்கு காரணமான ஒருவரையும் விடாமல் நீதியின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிபடி மதுபான கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழக மக்களில் ஒருவனாக அரசுக்கு இந்த கோரிக்கையை சமர்ப்பிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











