Vishal - மிக்ஜாம் புயல்.. எம்.எல்.ஏக்கள் எல்லாம் வெளியே வாங்க.. இதெல்லாம் கேவலமான விஷயம்.. விஷால் அதிரடி
சென்னை: Michaung Cyclone (மிக்ஜாம் புயல்) மிக்ஜாம் புயல் பாதிப்புகளை சரி செய்ய சென்னை தொகுதி எம்.எல்.ஏக்கள் வெளியே வர வேண்டும் என விஷால் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மிக்ஜாம் புயலால் பெய்த மழை சென்னையை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. நகரின் அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கியது. நேற்று காலையிலிருந்து தொடர்ந்து பெய்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர். பல இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டன. பள்ளிவாசல்கள், மண்டபங்களில் மக்கள் தங்கவும் செய்தனர்.

நகர்ந்த புயல்: மிக்ஜாம் புயல் சென்னைக்கு 100 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்தது. இந்த சூழலில் நேற்று இரவு அது ஆந்திரா நோக்கி நகர்ந்துவிட்டது. இதனால் மழையும் சென்னையில் நின்றுவிட்டது. இருந்தாலும் மழை ஏற்படுத்திய பாதிப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. அரசு இயந்திரமும் முழு மூச்சில் செயல்பட்டுவருகிறது. பல இடங்களில் தேங்கிய மழை நீர் வடியவும் செய்திருக்கிறது.
விஷால் வீடியோ: முன்னதாக நேற்று இரவு நடிகர் விஷால் மிக்ஜாம் புயல் பாதிப்புகள் குறித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "புயல், மழையால் மின்சாரம் முதலில் துண்டிக்கப்படும். பின்னர் தண்ணீர் வீட்டுக்குள் வரும் என்பது வழக்கமான விஷயம். அதேபோல்தான் அண்ணா நகரில் இருக்கும் என்னுடைய வீட்டுக்குள்ளும் தண்ணீர் வந்துவிட்டது.
இங்கே இந்த கதி: அண்ணா நகரிலேயே இந்த கதி என்றால் மற்ற இடங்களை யோசித்துப்பாருங்கள். 2015ஆம் ஆண்டு இதேபோன்று நடந்தபோது எல்லோரும் இறங்கி வேலை செய்தோம். முடிந்த அளவு மக்களுக்கு சேவை செய்தோம். 8 வருடங்கள் கழித்து அதைவிட மோசமாக நடப்பது கேள்விக்குறியாக இருக்கு. மழை நீர் சேமிப்பு/வடிகால் தொடர்பான சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன ஆனது என்று தெரியவில்லை.
வெளியே வாருங்கள்: ஒரு வாக்காளர் என்ற முறையில் இதனை கேட்டுக்கொள்கிறேன். சென்னை தொகுதி எம்.எல்.ஏக்கள் தயவு செய்து வெளியே வந்து சரி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். அந்தந்த தொகுதி எம்.எல்.ஏக்கள் வெளியே வந்து உதவினால் பொதுமக்களுக்கு பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் இருக்கும்.
பயம்: எனது வீட்டில் இருக்கும் சீனியர் சிட்டிசன்களான எனது அப்பா, அம்மா அச்சத்தில் இருக்கின்றனர். இப்போது எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்கியிருப்பது தர்மசங்கடமான, கேவலமான விஷயமாக பார்க்கிறேன். உடனடியாக இதனை சரி செய்ய மாநகராட்சி முன்வர வேண்டும், எதற்காக வரி கட்டுகிறோம் என கேட்க வைத்துவிடாதீர்கள். உதவுங்கள்" என பேசியிருந்தார்.


Click it and Unblock the Notifications











