நாகை கலெக்டரை நேரில் சந்தித்த விவேக்.. வேன் நிறைய தார்பாய் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அளித்தார்!
புயல் பாதித்த பகுதிக்கு நேரில் சென்று நிவாரணப் பொருட்கள் அளித்துள்ளார் நடிகர் விவேக்.
நாகை: தார்பாய், பெட்ஷீட் உட்பட கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பொருட்களை நாகை மாவட்ட ஆட்சியாளர் சுரேஷ்குமாரிடம் அளித்தார் நடிகர் விவேக்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் நிவாரண நிதி அளித்து வருகிறார்கள். மேலும் நிவாரண பொருட்களை டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று நடிகர் விவேக் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கஜா புயல் நிவாரண நிதிக்காக ரூ. 5 லட்சம் அளித்தார். அதன் தொடர்ச்சியாக நாகை சென்ற அவர், கஜா புயல் நிவாரணப் பொருட்களை அம்மாவட்ட ஆட்சியாளர் சுரேஷ்குமாரை நேரில் சந்தித்து, அவரிடம் அளித்தார்.
ஒரு வேன் நிறைய அளிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களில், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தார்பாய், பெட்ஷீட், பாய், சானிடரி நேப்கின், மெழுகுவர்த்தி, கொசுவலை, கொசுவத்தி, 1200 தண்ணீர் பாட்டில்கள் மற்றும் அடிப்படை மருந்துகள் இருந்தன.
இப்பொருட்களை புயலால் பெரும் பாதிப்பைச் சந்தித்த கிராமங்களில் ஒன்றான செம்பொரைக்கு வழங்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் விவேக் கேட்டுக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











