வேட்டியை வேலியாக்கி மரம் வளர்க்கும் மக்கள்.. நடிகர் விவேக் பெருமிதம்
முக்கூடல்: முக்கூடலில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி நாட்டை பசுமையாக வைத்திட நடிகர் விவேக் வேண்டுக்கோள் விடுத்தார்.
முக்கூடல் அருகே உடையாம்புளியில் கிராம உதயம் மற்றும் விவேக்கின் கிரீன் குளோப் அமைப்புகளின் சார்பில் பசுமை கிராமம் உருவாக்கும் திட்டத்தின் கீழ் துவக்க விழா மற்றும் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பராமரித்தல் விழா நடந்தது.
நடிகர் விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். கிராம உதயம் நிறுவனர் கோபாலசமுத்திரம் சுந்தரேசன் வரவேற்றார்.

விழாவில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி நடிகர் விவேக் பேசுகையில், வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்பது அவசியம். நாட்டை பசுமை ஆக்குவதே என் லட்சியம். இது வரை 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை கிரீன்குளோப் அமைப்பினர் வழங்கியுள்ளனர். அரசும் எங்கள் அமைப்புக்கு உதவி செய்தால் இன்னும் பல லட்சம் மரக்கன்றுகளை வழங்கலாம்.

வரும்போது அருகே கலியன்குளத்திற்கு சென்றேன். அங்குள்ள மக்கள் தாங்கள் அணிந்த வேஷ்டி, துணிகளை கொண்டு வேலி அமைத்து பல மரங்களை வளர்த்து வருகின்றனர். இது எனக்கு பெருமையாக உள்ளது. அந்த மக்களை பாராட்டுகிறேன் என்றார் விவேக்.
அவர் பேசுகையில், அங்கு நல்ல மழை பெய்தது. இதையடுத்து யாரும் போக வேண்டாம். நானும் உங்களுடன் மழையில் இருக்கிறேன் என்று கூறிய அவர் மழையில் நனைந்து கொண்டே பேசினார்.
நடிகர் விவேக் மற்றும் அவரது அமைப்பினர் தமிழகத்தில் 1 கோடி மரக் கன்றுகளை நடும் இலக்குடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











