ஐஸ்வர்யா ராய் பற்றி சர்ச்சை மீம்ஸ் வெளியிட்ட விவகாரம்... மன்னிப்பு கோரினார் நடிகர் விவேக் ஓபராய்
ஐஸ்வர்யா ராய் பற்றி சர்ச்சை மீம்ஸ் வெளியிட்டதற்கு மன்னிப்பு கோரியுள்ளார் நடிகர் விவேக் ஓபராய்.
மும்பை: ஐஸ்வர்யா ராய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மீம்ஸ் வெளியிட்டதற்காக மன்னிப்பு கோரியுள்ளார் நடிகர் விவேக் ஓபராய்.
17வது மக்களவைத் தேர்தல் 7கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெற உள்ளது. 7ம் கட்டத் தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து பல செய்தி நிறுவனங்கள் தங்களின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பு சரியானது அல்ல, தேர்தல் முடிவுகள் மாறலாம் என பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தேர்தல் முடிவு மற்றும் கருத்துக்கணிப்பை வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ் ஒன்றை நடிகர் விவேக் ஓபராய் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

ஐஸ் மீம்ஸ்:
அதில், நடிகை ஐஸ்வர்யா ராய் தனது முந்தைய காதலர்கள் மற்றும் கணவர் அபிஷேக் பச்சனுடன் இருப்பது போல் புகைப்படங்கள் வரிசையாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை காமெடிக்காக பகிர்ந்திருந்தார் விவேக். காரணம் அதில் ஒரு புகைப்படத்தில் ஐஸ்வர்யா ராயுடன், விவேக் ஓபராய் இருக்கிறார்.

காதலர்கள்:
ஐஸ்வர்யா ராயும், விவேக் ஓபராயும் ஒன்றாக சேர்ந்து நடித்த சமயத்தில் காதலித்து வந்தனர். நிச்சயதார்த்தம் வரை சென்ற அவர்களது காதல், சிலப்பல காரணங்களால் பாதியில் முறிந்தது. சில ஆண்டுகள் கழித்து அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ராய். தற்போது இந்தத் தம்பதிக்கு ஆராத்யா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

கண்டனம்:
இந்தச் சூழ்நிலையில் தான், ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்களை வைத்து சர்ச்சைக்குரிய வகையில் மீம்ஸ் ஒன்றை யாரோ தயாரித்திருக்கிறார்கள். அதனை விளையாட்டாக விவேக்கும் பகிர, பிரச்சினை பற்றிக் கொண்டது. அதெப்படி ஒரு பெண்ணைப் பற்றி இப்படி தரக்குறைவாக சித்தரித்து மீம்ஸ் வெளியிடலாம் என பல பெண்கள் அமைப்புகளும், பாலிவுட் பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
டிவீட் அழிப்பு:
இப்படியான ட்வீட்டுக்கு விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். அதன் தொடர்ச்சியாக, இந்த சர்ச்சை பற்றி தனது டிவிட்டர் பக்கம் வாயிலாக மன்னிப்பு கேட்டுள்ளார் விவேக் ஓபராய். அதோடு சம்பந்தப்பட்ட அந்த டிவிட்டையும் அவர் அழித்து விட்டார்.
தவறான கண்ணோட்டம்:
இது தொடர்பான தனது பதிவில், "சில நேரம் நமக்கு வேடிக்கையாக தோன்றும் ஒரு விஷயம், மற்றவர்களுக்கு அப்படி தோன்றுவதில்லை. கடந்த 10 ஆண்டுகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான ஆதரவற்ற பெண்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக நான் உழைத்திருக்கிறேன். ஒரு பெண்ணை இழிவுப்படுத்துவது பற்றி என்னால் சிந்தித்துக்கூட பார்க்க முடியாது.

மன்னிப்பு:
அந்த மீம்ஸ்க்கு நான் அளித்த பதிலால் ஒரு பெண்ணின் மனது காயப்பட்டிருந்தாலும், அது மாற்று நடவடிக்கைக்கு உட்பட்டது. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். டிவீட்டை டெலிட் செய்துவிட்டேன்" என விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











