பரீட்சை என்பதே மன உளைச்சல் தான்.. அதுவும் இந்த நேரத்துல..அரசுக்கு நடிகர் விவேக் திடீர் கோரிக்கை
சென்னை: ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப்பட்ட பின் பத்தாம் வகுப்பு தேர்வை வைத்துக் கொள்ளலாமே என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் லாக்டவுனை மத்திய மாநில அரசுகள் மேலும் நீட்டித்துள்ளன.
இந்தியாவில், இதுவரை இந்த வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3029 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருந்தும் இந்த தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் இதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்வி அமைச்சர்
இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1-ஆம் தேதி முதல், ஜூன் 12 ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் அறிவித்தார். அதற்கு தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருவதாகவும், மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி உள்பட அனைத்தும் செய்துதரப்படும் என்றும் கூறியிருந்தார்.

நுழைவு சீட்டு
ஒரு வகுப்பில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தனியார் பள்ளிகளில் அரசு பள்ளி ஆசிரியர்களும், அரசு பள்ளியில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் பணிபுரிவார்கள். மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நுழைவு சீட்டு வழங்குவதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்திருந்தார்.

சொந்த ஊரில்
இந்நிலையில் பத்தாம் வகுப்பு படித்துவரும் மாணவர்கள் பலர், லாக்டவுனால் சொந்த ஊரில் இருக்கின்றனர், அவர்கள் தேர்வு மையம் வருவதற்கு, இ பாஸ் உள்ளிட்டவற்றை வாங்குவதில் சிக்கல் ஏற்படும் என்றும் அதனால் இந்த தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நடிகர் விவேக்
இந்நிலையில் நடிகர் விவேக்கும் தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர், பரீட்சை என்பதே மன உளைச்சல் தான். அதுவும் இந்த நேரத்தில் அது மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்தம் பெற்றோருக்கும் பெரும் மன இறுக்கம். ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப் பட்ட பின் தேர்வை வைத்துக்கொள்ளலாமே! பள்ளிக் கல்வித்துறை தயை செய்து பரிசீலிக்கவும் என்று கூறியுள்ளார்.
Recommended Video

மாற்றம் இல்லை
இதற்கிடையே, ஊரடங்கு நீடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளதால், பத்தாம் வகுப்பு தேர்வு தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அமைச்சர் செங்கோட்டையன் அதை மறுத்துள்ளார். தேர்வு தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் திட்டமிட்டபடி தேர்வு நடக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











