கோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது.. விவேக் கண்ணீர்!
சென்னை: கோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது என நடிகர் விவேக் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.
பல தசாப்தங்களாக பாட்டு உலகில் கோலொச்சி வந்த ஆண் குயில் என அழைக்கப்படும் எஸ்பி பாலசுப்ரமணியம் இன்று காலமானார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாடகர், இசையமைப்பாளர், நடிகர், டப்பிங் கலைஞர் என பல முகங்களை கொண்ட எஸ்பிபியின் மறைவு ஒட்டு சினிமாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கண்மூடிக் கொண்டது
அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விவேக்கும் எஸ்பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, பெரும் இழப்பு இசை உலகத்திற்கு..பரந்து விரிந்த இந்த உலகமெல்லாம் பறந்து பறந்து 40,000 பாடல்களுக்கு மேல் பாடி, கோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது என குறிப்பிட்டுள்ளார்.

சகாப்தம்
மற்றொரு டிவிட்டில், சிலர் வாழ்வு சாதனை; சிலர் வாழ்வு சரித்திரம்; ஆனால் சிலர் வாழ்வோ சகாப்தம்! அப்படி ஒரு சகாப்தம் எஸ்பிபி. இன்னொரு எஸ்பி இனி என்றோ? என கண்கள் கலங்க டிவிட்டியுள்ளார் விவேக்.

கண்களுக்கு நினைவாக
மேலும் ஒரு டிவிட்டில் தனக்கு பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கேக் ஊட்டி விடும் போட்டோவை பகிர்ந்துள்ள நடிகர் விவேக், அவர் நினைவாக என் கண்களுக்கு இந்த ஒரு படம் தான்! ஆனால் என் காதுகளுக்கு எத்தனையோ ஆயிரம் பாடல்கள் என டிவிட்டியுள்ளார்.

பியானோ வாசித்து
எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கான கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்ட நடிகர் விவேக் கேளடி கண்மணி படத்தில் அவர் மூச்சு விடாமல் பாடிய பாடலை பியானோவில் வாசித்து அவர் மீண்டு வருவார் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











