நடிகர் விவேக் இன்னும் ஆபத்தான கட்டத்தில்தான் உள்ளார்.. மருத்துவமனை விளக்கம்!
சென்னை: நடிகர் விவேக் இன்னும் ஆபத்தான கட்டத்தில்தான் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நடிகர் விவேக்கிற்கு இன்று காலை திடீர் மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரத்துறை செயலாளர்
இந்நிலையில் விவேக்கிற்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவ குழுவினர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்களுடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் உடன் இருந்தார்.

சுயநினைவின்றி கொண்டுவரப்பட்டார்
அப்போது பேசிய மருத்துவர்கள், நடிகர் விவேக்கின் உடல் நலக்குறைவுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தனர். மேலும் காலை 11 மணியளவில் சுயநினைவின்றிதான் விவேக் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

கார்டியாக் அரெஸ்ட்தான்
அவருக்கு இதயத்தின் இடதுபுற ரத்தக்குழாயில் 100% ரத்த அடைப்பு ஏற்பட்டிருந்ததாகவும் ஆஞ்சியோ சிகிச்சை மூலம் அடைப்பு சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தனர். விவேக்கிற்கு ஏற்பட்டது முழுக்க முழுக்க கார்டியாக் அரெஸ்ட்தான் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆபத்தான நிலையில்
மேலும் நடிகர் விவேக் இன்னமும் ஆபத்தான நிலையில்தான் உள்ளார் என்றும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் நடிகர் விவேக் உள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர். 24 மணி நேரத்திற்கு பிறகே அவரது உடல்நிலை குறித்து கூற முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ரத்தக்கொதிப்பு இருந்தது
மேலும் நடிகர் விவேக்கிற்கு இது முதல் மாரடைப்பு என்றும், அவருக்கு ஏற்கனவே ரத்தக்கொதிப்பு இருந்தது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நடிகர் விவேக்கிற்கு கொரோனா தொற்று எதுவும் இல்லை என்றும் மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











