எவ்வளவு உயர்ந்த மனிதர்.. இந்த மகா மனிதரின் மனிதநேயத்தின் முன்னால்.. விஜயகாந்தால் நெகிழ்ந்த விவேக்!
சென்னை: நடிகர் விவேக் நடிகர் விஜயகாந்த் செய்த ஒரு காரியத்தால் நெகிழ்ந்து போயுள்ளார்.
சென்னையில் நேற்று கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை கீழ்ப்பாக்கம் பகுதியில் அடக்கம் செய்ய சென்ற ஊழியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அப்பகுதி மக்கள் கடுமையாகத் தாக்கினர்.
அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மருத்துவர் உடல் போலீஸ் உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டது.

அதிர்ச்சி பரபரப்பு
இந்நிலையில் தாக்குதல் நடத்தியதாக 20 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். மக்களுக்காக சேவை செய்த உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

அடக்கம் செய்ய இடம்
இதனை தொடர்ந்து தேமுதிக தலைவருவம் நடிகருமான விஜயகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய தன்னுடைய ஆண்டாள் அழகர் கல்லூரியில் ஒரு பகுதியை ஒதுக்கித் தருவதாக தெரிவித்தார்.

வேதனையளிக்கிறது
கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை மக்களுக்கு தமிழக அரசு புரியவைக்க வேண்டும். கடவுளுக்கு அடுத்தபடியாக நான் கருதுவது மருத்துவர்களைத்தான். ஆனால் மக்கள் சேவை செய்யும் மருத்துவர்களுக்கு இந்த நிலை என்பது மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது என்று உருக்கமாக தெரிவித்தார்.

உயர்ந்த மனிதர்
நடிகர் விஜயகாந்தின் இந்த அறிவிப்புக்கு பலரும் பாராட்டும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விவேக், விஜயகாந்தின் இந்த செயலை பார்த்து நெகிழ்ந்து போயிருக்கிறார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், எவ்வளவு உயர்ந்த மனிதர்!!! இந்த மகா மனிதரின் மனித நேயத்தின் முன்னால் தலை வணங்கி நெகிழ்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இறைவனை பிரார்த்திக்கிறோம்
விவேக்கின் இந்த டிவிட்டை பார்த்த விஜயகாந்தின் இந்த ரசிகர், மனிதநேயத்தின் மொத்த உருவம். அந்த மனசுதான் சார் நீங்க.. தாங்கள் மீன்டும் பழைய நிலைக்கு திரும்பி வரவேண்டும் இறைவனை பிரார்த்திக்கிறோம் கேப்டன் சார் என பதிவிட்டுள்ளார்.

மாமனிதரால் மட்டுமே
மற்றொரு ரசிகரான இவர், மனிதம் வாழ்கிறது என்றால் இவர் போன்ற மாமனிதரால் மட்டுமே என்று கூறியிருக்கிறார். இது தான் மனிதாபிமானம். இந்த பெருந்தன்மையை பாராட்ட வேண்டும். வாழ்த்துகள்! என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











