எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு வலி வாழை மாதிரி இருக்கும்.. யோகி பாபு எமோஷனல்!
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 23ஆம் தேதி வெளியான படம் வாழை. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து ஆதரவு பெருகி வரும் நிலையில், படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக இப்போதுவரை ஓடிக்கொண்டு உள்ளன. இது மட்டும் இல்லாமல், திரைத்துறையைச் சேர்ந்த பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படத்தை பார்த்த நகைச்சுவை நடிகர் யோகி பாபு, வாழை படம் குறித்த தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்
கிட்டத்தட்ட ஒன்றரை நிமிடங்களுக்கு பேசி வீடியோவாக யோகி பாபு வெளியிட, அதனை மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, யோகி பாபுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் யோகி பாபு பேசிய வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக மாரி செல்வராஜ் இதற்கு முன்னர் இயக்கிய பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

வாழை படம் குறித்து யோகி பாபு பேசுகையில், “ சமீபத்தில் நான் வாழை படம் பார்த்தேன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் கலையரசன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப் படம் என்னை மிகவும் பாதித்துவிட்டது. எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு வாழை இருக்கும். மாரி செல்வராஜின் வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டமான விஷயங்கள் இருந்துள்ளது என்பது மிகவும் வருத்தமாக உள்ளது. குறிப்பாக க்ளைமேக்ஸில் அம்மாவின் மடியில் படுத்திருப்பது மாரி செல்வராஜ்தான் எனும்போது கலங்கிவிட்டேன்.
உண்மை: நான் மாரி செல்வராஜுடன் பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்கள் நடித்துள்ளேன். பரியேறும் பெருமாள் படம் செய்யும்போதே மாரி செல்வராஜ் வாழ்க்கையில் நடைபெற்ற சில உண்மைச் சம்பவங்களும் இருந்தது. படத்தின் கதை கேட்கும்போது எனக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் படம் செய்யும்போதுதான் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் இவ்வளவு பிரச்னைகள் இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
வலி: ஆனால் பரியேறும் பெருமாளில் மாரி செல்வராஜ் மறைத்தது வாழை படத்தைத்தான். மாரி செல்வராஜ் தனது வாழ்வில் இவ்வளவு பெரிய சோகம் இருக்கின்றது என கூறியதே இல்லை. மிகவும் தரமான படம். இன்றைக்கும் இந்தப் படம் தியேட்டரில் நன்றாக ஓடிக்கொண்டு உள்ளது. அனைவரும் இந்தப் படத்தை தியேட்டரில் போய்ப் பாருங்கள். ஒரு மனிதனின் வலியை ரொம்பத் தெளிவா சொல்லி இருக்காரு. ஒரு வலியைச் சுற்றி பல வலிகள் இருக்கு. எல்லோரும் இந்தப் படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள்” எனக் கூறியுள்ளார்.
பாலா: ஏற்கனவே படம் பார்த்த பலரும் படத்தை பாராட்டினர். இயக்குநர் பாலாவும் நடிகர் சூரியும் மாரி செல்வராஜ்க்கு முத்தங்கள் கொடுத்தனர். அதேபோல் நடிகர் தங்கதுரை அழுதுகொண்டே மாரி செல்வராஜைக் கட்டிப் பிடித்தார். தமிழ் சினிமா நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் படத்தைப் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











