ஹேமா குழு அறிக்கை விவகாரம்.. மௌனம் சாதிக்கும் மோகன்லால் -மம்முட்டி.. காரணம் என்ன?
சென்னை: நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களாக அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வருபவர்களாக காணப்படுகின்றனர். தயாரிப்பாளர்களாகவும் சிறப்பான செயல்பாட்டை இவர்கள் செய்து வரும் சூழலில் முன்னணி மற்றும் மூத்த நடிகர்களாக இவர்கள் அடுத்தடுத்த மலையாளத் திரையுலகம் சந்திக்கும் பிரச்சினைகளில் குரல் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
மலையாள திரையுலகம் சந்தித்து வரும் பாலியல் பிரச்சனைகள் குறித்து ஹேமா கமிட்டி கொடுத்துள்ள அறிக்கையில் மம்மூட்டி மற்றும் மோகன்லால் இருவரும் வாய் திறக்காமல் தொடர்ந்து மௌனமாக இருப்பது பல்வேறு கண்டனங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது.

மலையாள திரையுலகம்: மலையாள திரைத்துறையில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் குறித்த நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை தற்போது வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியையும் கண்டனங்களையும் ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2017ம் ஆண்டில் பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதையடுத்து நீதிபதி ஹேமா தலைமையில் குழுவினர் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டிலேயே ஹேமா தலைமையிலான குழு அறிக்கையை சமர்ப்பித்தது.
ஹேமா குழு அறிக்கை: கேரள திரைத்துறையில் நடிகைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் விவரங்களை இந்த குழு தாக்கல் செய்தது. ஆனால் இந்த அறிக்கையை வெளியிட தடை இருந்த நிலையில் அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த அறிக்கை குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளது. மலையாள திரையுலகில் 10 -15 பேர் அடங்கிய நபர்கள் அனைத்து விஷயங்களையும் கட்டுப்படுத்துவதாகவும் இவர்கள் பெண் தொழிலாளர்கள் மற்றும் நடிகைகள் மீது பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவதாகவும் ஹேமா தலைமையிலான குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தீபா தாமஸ் கேள்வி: இந்த அறிக்கை மிகப்பெரிய அதிர்ச்சியையும் கண்டனங்களையும் மலையாள திரையுலகில் ஏற்படுத்தியுள்ளன பிரபல மலையாள இயக்குனர் ஜீது ஜோசப் பெலிசெரி இந்த விஷயத்தில் அமைதி காப்பது சரியான தீர்வு அல்ல என்று தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த கருத்தை பாராட்டி பேசி உள்ள பிரபல மலையாள நடிகை தீபா தாமஸ் முன்னணி நடிகர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லால் இந்த விஷயத்தில் மௌனம் காப்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். இது போன்ற ஒரு மிகவும் கண்டனத்துக்குரிய விஷயத்தில் அவர்கள் மௌனமாக இருப்பது குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அமைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மோகன்லால் -மம்முட்டி மௌனம் ஏன்?: இந்த விஷயத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நடிகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஜீது ஜோசப்பின் கருத்திற்கும் தீபா வரவேற்பு தெரிவித்துள்ளார். மலையாள திரையுலகின் மூத்த நடிகர்களாகவும் முன்னணி நடிகர்களாக இருந்து வருகின்றனர் மம்மூட்டி மற்றும் மோகன்லால். இவர்கள் இல்லாத மலையாள திரையுலகத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களை இந்த வயதிலும் இவர்கள் கொடுத்து வருகின்றனர். ஆயினும் மலையாள திரையுலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் அவர்கள் மௌனம் சாதிப்பது பல்வேறு தரப்பினரின் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளன.
கேள்வி எழுப்புவார்களா?: மூத்த நடிகர்களாக இளம் நடிகர்கள் மற்றும் நடிகைகளை அரவணைத்து அவர்களின் பிரச்சனைகளுக்கு மம்முட்டி மற்றும் மோகன்லால் குரல் கொடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் விருப்பமாக காணப்படுகிறது. ஆனால் இது போன்றதொரு முக்கியமான பிரச்சனையில் அவர்கள் தொடர்ந்து எந்த விதமான கருத்தையும் முன் வைக்காமல் இருப்பது அதிகமான கேள்விகளை எழுப்பியுள்ளது. அவர்கள் மௌனமாக இருப்பதன் மூலம் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்களா என்ற கேள்விகளையும் பல்வேறு தரப்பினரும் எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











