திரை உலகிற்கு வந்தவுடன் தல, தளபதியாக நடிகர்கள் கனவு காண்பது தவறு: கேயார்
சென்னை: திரை உலகிற்கு வந்தவுடன் தல, தளபதி ஆகிவிட வேண்டும் என்று நடிகர்கள் கனவு காண்பது தவறு என்று தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் கேயார் தெரிவித்துள்ளார்.
விஜயலட்சுமி மற்றும் ராஜலட்சுமி ஆகிய பெண் இயக்குனர்கள் சேர்ந்து தயாரிக்கும் காதல் சொல்ல ஆசை படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் இன்று நடந்தது. நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சி மூலம் இயக்குனராக அறிமுகமான தமிழ் சீனு இப்படத்தை இயக்குகிறார். இதில் அஷோக் மற்றும் மது ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கின்றனர். நாயகிகளாக புதுமுக நடிகைகள் நடிக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், நடிகர் விஜய் சேதுபதி, நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கேயார் பேசுகையில்,

தல, தளபதி
திரைத்துறைக்குள் நுழைந்தவுடனேயே தல, தளபதி ஆகிவிட வேண்டும் என்று நடிகர்கள் கனவு காண்பது தவறு. கஷ்டப்பட்டு உழைத்தால் தான் சினிமாவில் நல்ல நிலைமையை அடைய முடியும் என்றார் கேயார்.

விக்ரம்
ஒரு நல்ல நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற விக்ரமுக்கு 18 ஆண்டுகள் எடுத்தன. அவர் பல படங்களில் நடித்தபோதிலும் அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது. அதனால் அவர் விரக்தி அடைந்து கெட்டப்பழக்கங்களுக்கு அடிமையாகிவிடவில்லை. மாறாக டப்பிங் பேசுவது உள்ளிட்ட பிற வேலைகளை செய்து வந்தார் என்று கேயார் தெரிவித்தார்.

சேது
சேது படம் மூலம் தான் விக்ரமுக்கு சிறந்த நடிகர் என்ற அங்கீகாரம் கிடைத்தது. சினிமாவில் சாதிக்க கஷ்டப்பட வேண்டும். சினிமாவுக்கு வருகிறவர்கள் கஷ்டப்பட்டால் தான் முன்னேற முடியும் என்று கேயார் கூறினார்.

விஜய் சேதுபதி
நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி கூறுகையில், ஹீரோ அஷோக்குடன் நான் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். நான் அந்த படத்தில் ரூ.250 சம்பளத்திற்கு ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நடித்தேன். அஷோக் திறமையானவர். அவர் தனது திறமையின் மூலம் பெரிய நிலைக்கு வர வேண்டும். மற்றொரு ஹீரோவான மதுவையும் எனக்கு நன்றாகத் தெரியும். டப்பிங் ஆர்டிஸ்ட்டான அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டிருக்கிறேன் என்றார்.

எஸ்.ஜே.சூர்யா
யார் வேண்டும் என்றாலும் படத்தை இயக்கலாம், படத்தில் நடிக்கலாம் என்பதை தமிழ் திரையுலகில் அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குனர் பாரதிராஜா. அதே போன்று நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சி பல புதிய இயக்குனர்களை தந்துள்ளது. அந்த நிகழ்ச்சியின் மூலம் வரும் இயக்குனர்கள் வெற்றி படங்களை கொடுத்துள்ளனர். அந்த வகையில் இந்த இயக்குனரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார் எஸ்.ஜே. சூர்யா.


Click it and Unblock the Notifications











