நடிகர்கள் மீது குவியும் பாலியல் புகார்.. நெருக்கடியில் மலையாள சினிமா.. நடிகை ஊர்வசி வேதனை!
கொச்சி: ஹேமா கமிட்டி அறிக்கை மீது உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும், நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள், அவர்களை தவறாக வழிநடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவைச் சேர்ந்த நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டியில் பழம்பெரும் நடிகை சாரதா மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வல்சலா ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.

ஹேமா கமிஷன்: இந்தக் கமிட்டி 60க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட நடிகைகள், பெண் கலைஞர்கள் மற்றும் நடிகர்களிடம் விசாரணை நடத்தி கடந்த சில தினங்களுக்கு முன் இந்த அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை வெளியானதற்கு பின் பல நடிகைகள் தங்களுக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக கூறி வருகின்றனர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஸ்ரீலேகா மித்ரா என்ற நடிகை பிரபல டைரக்டரும், மலையாள சினிமா அகாடமி தலைவருமான ரஞ்சித் மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
அடுத்தடுத்த புகார்: இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித் சினிமா அகாடமி தலைவர் பொறுப்பை விட்டு விலக வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது. இதேபோல ரேவதி சம்பத் என்ற நடிகை, நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். தான் பிளஸ் டூ முடித்த நேரத்தில் தன்னை சந்தித்த நடிகர் சித்திக், சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி, அப்போது தன்னை பலாத்காரம் செய்ததாக அவர் கூறியுள்ளார். இப்படி நடிகைகள் கூறும் அடுத்தடுத்த புகார் மலையாள சினிமாவில் புயலை கிளப்பி உள்ளது.
நடிகை ஊர்வசி: இந்நிலையில், இதுகுறித்து பேசி உள்ள நடிகை ஊர்வசி, ஹேமா கமிட்டி அறிக்கை மீது உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும், நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள், அவர்களை தவறாக வழிநடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட நடிகைகளுக்கு மலையாள நடிகர்கள் சங்கம் (அம்மா) ஆதரவளிக்க வேண்டும். குற்றவாளிகள் அவர்களின் தவறுகளுக்கான ஆதாரங்களுடன் அடையாளம் காணப்பட்டு, அதற்கேற்ப தண்டிக்கப்பட வேண்டும், என்றார்.
மேலும், பெண்களுக்கு எதிரான எந்தவொரு குற்றத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாது, இது போன்ற குற்றவாளிகளை சங்கம் அடையாளம் கண்டு அவர்களை சங்கத்தில் (அம்மா)வில் இருந்து வெளியேற்ற வேண்டும். தவறு செய்த யாருடனும் பழகக் கூடாது என்றும் முடிவு செய்ய வேண்டும் என்று ஊர்வசி கூறினார்.


Click it and Unblock the Notifications











