Vadivelu - பல படங்களில் சேர்ந்து நடித்த கோவை சரளாவுக்கே ஆப்பா?. வடிவேலு பற்றி ஆர்த்தி ஓபன் டாக்
சென்னை: வைகைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் வடிவேலு. ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொண்டு தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். சில பிரச்னைகளால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2, மாரீசன் என்று பிஸியாக நடித்துவருகிறார் வடிவேலு.
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு. ராஜ்கிரணால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் கவுண்டமணி, செந்தில் உச்சத்தில் இருந்தபோது அவர்களுடன் சேர்ந்து சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். அந்தக் காலகட்டத்தில் விவேக்கும் வளர்ந்துவந்தார். எனவே வடிவேலு வளர்வதற்கு கடுமையான போட்டி சூழலே இருந்தது. ஆனால் எதற்கும் அஞ்சவில்லை வடிவேலு. தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு உழைத்துக்கொண்டே இருந்தார் அவர்.

ஆரோக்கியமான வளர்ச்சி: குறிப்பாக, தன்னுடைய காமெடிகளில் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு மக்களை சிரிக்க வைத்தார் வடிவேலு. அதேபோல் எந்த ஈகோவும் இல்லாமல் விவேக்குடனும் சேர்ந்து நடித்தார். இதனால் அவரது வளர்ச்சி ஆரோக்கியமாகவே இருந்தது. ஒருகட்டத்தில் வயது மூப்பு காரணமாகவும்; காலம் மாறியதன் காரணமாகவும் கவுண்டமணியும் செந்திலும் சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க ஆரம்பித்தனர்.
வைகை புயல்: அந்த வெற்றிடத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டார் வடிவேலு. தனக்கென தனி டீமை உருவாக்கிக்கொண்டு காமெடி செய்து ரகளைகட்டி அடித்தார். இதனால் அவரது வளர்ச்சி 2000களின் தொடக்கத்தில் புயல் வேகத்தில் இருந்தது. அவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலைதான் அப்போது இருந்தது. பல படங்களில் நடித்தாலும் ஒவ்வொரு காமெடி காட்சியையும் வித்தியாசமான முறையிலும் புதிய பாணியிலும் நடித்து அப்ளாஸை அள்ளினார் வைகை புயல் வடிவேலு. சூழல் இப்படி இருக்க அவருக்கு ஏற்பட்ட சில நெருக்கடிகளாலும், பஞ்சாயத்துக்களாலும் சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.
இரண்டாவது இன்னிங்ஸ்: கிட்டத்தட்ட பத்து வருடங்கள் வனவாசம் இருந்த வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் வந்தார். அந்தப் படம் தோல்வியடைந்தாலும் அடுத்ததாக வெளியான மாமன்னன் மாபெரும் வெற்றி பெற்றது. அடுத்ததாக ஃபகத் பாசிலுடன் இணைந்து மாரீசன் படத்தில் நடிக்கிறார். அதனை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படமும் வடிவேலுவின் பெயர் சொல்லும் படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
கோவை சரளாவுக்கே ஆப்பா?: இந்நிலையில் நடிகை ஆர்த்தி வடிவேலுவின் மறுபக்கம் குறித்து பேசியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "வடிவேலு மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் என்பதை மறுக்க முடியாது. அவர் நடிக்கும் படங்களில் தன்னுடன் இருப்பவர்களுக்கு மட்டும்தான் பட வாய்ப்பு கொடுப்பார். இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்துக்காக இயக்குநர் சிம்புதேவன் என்னையும், கோவை சரளாவையும் கமிட் செய்திருந்தார். ஆனால் வடிவேலுவோ அவரிடம் சென்று ஆர்த்தியும், கோவை சரளாவும் ஏற்கனவே பார்த்த முகங்கள். அதனால் இந்தப் படத்தில் அவர்கள் நடிக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.
பிறகு நாங்கள் அந்தப் படத்திலிருந்து தூக்கப்பட்டோம். ஆனால் அந்தப் படம் ஆரம்பிக்கப்படவே இல்லை" என்றார். வடிவேலுவுடன் பணியாற்றியவர்கள் தொடர்ந்து அவர் குறித்து இதுபோன்ற குற்றச்சாட்டை வைத்துவருகிறார்கள். ஆனால் இந்த விஷயம் ரசிகர்களுக்கு உச்சக்கட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் வடிவேலுவும், கோவை சரளாவும் ஏராளமான படங்களில் இணைந்து நடித்து ஹிட் காம்போ என்று பெயர் எடுத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட கோவை சரளாவுக்கே வடிவேலு ஆப்பு வைத்திருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











