ஒரே நேரத்தில் 3000 போட்டோகிராஃபர்கள்.. கின்னஸ் சாதனை படைத்த ரோஜா.. இது தெரியாம போச்சே!
ஹைதராபாத்: ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா புதிய சாதனை ஒன்றைப் படைத்து,வொண்டர் புக் ஆஃப் ரெக்கார்ட் என்ற கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
நடிகர் பிரசாந்தின் செம்பருத்தி படத்தின் மூலம் 1992ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரோஜா.
தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்த நடிகை ரோஜா, தற்போது அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார்.

டாப் நடிகை
தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக 90களில் வலம் வந்தார் நடிகை ரோஜா. 1991ம் ஆண்டு தெலுங்கில் வெளியான சர்ப்பயாகம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர், தமிழில் அறிமுகமானார். செம்பருத்தி, சூரியன், உழைப்பாளி, அதிரடிப்படை, இந்து, வீரா என அடுத்தடுத்து ரோஜா தமிழில் நடித்த பல படங்கள் ஹிட் அடித்த நிலையில், தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக மாறினார்.

நயன்தாராவுக்கு முன்னோடி
நடிகைகள் இயக்குநர்களை திருமணம் செய்வது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை இந்த ஆண்டு திருமணம் செய்த நிலையில், அவருக்கெல்லாம் முன்னோடியாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான இயக்குநர் ஆர்.கே.செல்வமணியுடன் திருமணம் முடித்தவர், பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துகொண்டு, அரசியலில் ஆர்வம் காட்டத்தொடங்கினார்.

அரசியல் என்ட்ரி
இதையடுத்து ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்ட அவர், தற்போது ஆந்திராவின் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில், புதிய கின்னஸ் சாதனை ஒன்றை அமைச்சர் ரோஜா படைத்துள்ளார்.

3 ஆயிரம் போட்டோகிராஃபர்கள்
அதாவது, ஒரே நேரத்தில் 3 ஆயிரம் போட்டோ கிராஃபர்களால் புகைப்படம் எடுக்கப்பட்டவர் என்ற பெருமையை பெற்று கின்னஸில் இடம்பிடித்துள்ளார் ரோஜா. இதற்கான ஏற்பாடு விஜயவாடாவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செய்யப்பட்டிருந்த நிலையில் 3000 போட்டோகிராபர்கள் டிஜிட்டல் கேமராக்களோடு அந்த திருமண மண்டபத்தில் ஆஜராகினர். பின்னர் அங்கு வந்த அமைச்சர் ரோஜா திருமண மண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மேடையில் தோன்றினார். தொடர்ந்து, 3 ஆயிரம் போட்டோகிராஃபர்கள் அவரை புகைப்படம் எடுத்தனர். ஒன் கிளிக் ஆன் சேம் டைம் என்ற முறையில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் போட்டோகிராபர்களும் அமைச்சர் ரோஜாவை போட்டோ எடுத்தனர்.

சாதனை புத்தகத்தில்
இதன் மூலம் முதன்முறையாக 3 ஆயிரம் போட்டோகிராஃபர்களால் புகைப்படம் எடுக்கப்பட்ட முதல் பெண் அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதனால், 'வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்' கின்னஸ் சாதனை புத்தகத்தில் அவர் இடம் பிடித்தார். இதையடுத்து அமைச்சர் ரோஜாவுக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. அட இப்படிக்கூட சாதனை படைக்கலாமா? இது தெரியாமப் போச்சே என பல சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் யோசித்து வருகின்றனர். அடுத்ததாக யார் 4000 அல்லது 5000 போட்டோகிராஃபர்களை வைத்து போட்டோ எடுக்கப் போகிறார்களோ!


Click it and Unblock the Notifications











