என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா.. பெண்கள் தின வாழ்த்து சொன்ன ஆண்ட்ரியா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: நடிகை ஆண்ட்ரியா பெண்கள் தின வாழ்த்து சொல்லியிருக்கும் சூழலில் அவரை நெட்டிசன்கள் சிலர் கலாய்த்து வருகின்றனர்.
நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியா ஆரம்பத்தில் பாடகியாக அறியப்பட்டவர். அந்நியன் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் நோக்கியா, வேட்டையாடு விளையாடு படத்தில் இடம்பெற்ற கற்க கற்க, ஆதவன் படத்தில் இடம்பெற்ற ஏனோ ஏனோ உள்ளிட்ட பல பாடல்களை பாடியவர்.

பாடகி டூ நடிகையான ஆண்ட்ரியா
பாடகியாக பிரபலமான ஆண்ட்ரியா கண்டநாள் முதல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது நடிப்பு ஓரளவு பேசப்பட்டது. இதனையடுத்து இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார், ஜோதிகா உள்ளிட்டோர் நடித்து கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்தார் ஆண்ட்ரியா. இந்தப் படத்தில் அவரது நடிப்பு பலரையும் ஈர்த்தது.

செல்வராகவன் இயக்கத்தில் ஆண்ட்ரியா
இதனையடுத்து சில வருடங்கல் நடிக்காமல் பாடுவதில் கவனம் செலுத்திய ஆண்ட்ரியா செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்தார். வரலாற்று ஆராய்ச்சியாளர் கதாபாத்திரத்தை ஏற்ற ஆண்ட்ரியா ஆயிரத்தில் ஒருவனில் சிறந்த நடிப்பை வழங்கினார். அந்தப் படத்தில் நடித்ததோடு மட்டுமின்றி பாடல் பாடவும் செய்தார். ஆயிரத்தில் ஒருவனில் நடித்த பிறகு அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தன.

முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆண்ட்ரியா
அதன்படி அஜித் நடித்த மங்காத்தா, கமல் நடித்த விஸ்வருபம், உத்தம வில்லன், ஜீவா நடித்த என்றென்றும் புன்னகை, சுந்தர் சி நடித்த அரண்மனை என ஏராளமான தமிழ் படங்களிலும், அன்னையும் ரசூலும் உள்ளிட்ட மலையாள படத்திலும் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வர ஆரம்பித்திருக்கிறார் ஆண்ட்ரியா.

வடசென்னையில் கலக்கிய ஆண்ட்ரியா
ஆண்ட்ரியாவின் கேரியரிலேயே முக்கியமான படம் வடசென்னை. அமீரின் மனைவியாக சந்திரா என்ற கதாபாத்திரத்தில்; தனது கணவரை கொன்றவர்களை பழிவாங்குவதற்காக காத்திருப்பதும், கிடைக்கும் சந்தர்ப்பத்தையெல்லாம் தனக்காக மாற்றிக்கொள்வதும் என ஆண்ட்ரியாவின் நடிப்பு வடசென்னை படத்தின் ப்ளஸ்களில் ஒன்றாகும். இப்போது அவர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஆண்ட்ரியா சொன்ன பெண்கள் தின வாழ்த்து
இந்நிலையில் இன்று சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பலரும் பெண்கள் தின வாழ்த்தை சொல்லிவருகின்றனர். அந்தவகையில் ஆண்ட்ரியாவும் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து பெண்கள் தின வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

ஆண்ட்ரியாவின் வாழ்த்து; ஆதரவும், விமர்சனமும்
ஆனால் ஆண்ட்ரியா கொடுத்திருக்கும் போஸை சிலர் கலாய்த்துவருகின்றனர். அந்த புகைப்படத்தில் அவர் ஒரே ஒரு போர்வையை சுற்றிகொண்டபடி இருக்கிறார். இதனைப் பார்த்த சிலர் இப்படியா பெண்கள் தின வாழ்த்து சொல்வது என கேள்வி எழுப்பி ஆண்ட்ரியாவை விமர்சித்துவருகின்றனர். அதேசமயம், இது அவரது சுதந்திரம் இதில் நாம் ஏன் தலையிட வேண்டும் என பலர் ஆண்ட்ரியாவுக்கு ஆதரவு கொடுத்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











