நடிகை கடத்தல் வீடியோ... நீதிமன்றத்தில் பார்வையிட்டார் நடிகர் திலீப்
கொச்சி: நடிகை கடத்தல் வீடியோவை, நடிகர் திலீப் தனது வழக்கறிஞருடன் சென்று பார்வையிட்டார்
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்த மலையாள முன்னணி நடிகை ஒருவர், கடந்த 2017 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக புகார் எழுந்தது. இந்தச் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தக் கடத்தலில் ஈடுபட்ட பல்சர் சுனில் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். நடிகர் திலீப்புக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் கூலிப்படையை வைத்து கடத்தலில் அவர் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

ஜாமினில் விடுவிப்பு
இதையடுத்து நடிகர் திலீப்பை கைது செய்த போலீசார், கொச்சி ஆலுவா சிறையில் அடைத்தனர். 85 நாட்கள் சிறையில் இருந்த திலீப் பின்னர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

பாலியல் தொல்லை வீடியோ
இந்த வழக்கு விசாரணை கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. குற்றப்பத்திரிகையுடன் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோவையும் போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

நடிகர் திலீப் மனு
அந்த வீடியோவை, தனக்கு வழங்குமாறு நடிகர் திலீப் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அந்த வீடியோவை அவருக்கு வழங்க மறுத்துவிட்டது. அதோடு அந்தக் காட்சிகளை பார்க்க அனுமதி வழங்கியது.

பல்சர் சுனில்
இந்நிலையில் நடிகை கடத்தல் வழக்கில் கைதான, பல்சர் சுனில், மார்ட்டின், மணிகண்டன், விஜீச், சனல்குமார் ஆகிய 5 பேரும் அந்த வீடியோவை பார்க்க, தங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

அங்கமாலி நீதிமன்றம்
அதன்படி இன்று காலை 11.30 மணி முதல் அங்கமாலி நீதிமன்றத்தில் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. பல்சர் சுனில் உள்ளிட்டவர்கள் இன்று காலையில் அந்த வீடியோவை பார்வையிட்டனர்.

திலீப் பார்வையிட்டார்
பின்னர் மதியத்துக்கு மேல், நடிகர் திலீப் நீதிமன்றத்துக்கு வந்தார். அவருடன் டெக்னிக்கல் டீமும் அவரது வழக்கறிஞரும் வந்திருந்தனர். திலீப், அந்த வீடியோவை பார்த்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.


Click it and Unblock the Notifications











