நடிகை கடத்தல் வழக்கு.. சாட்சிகளை கலைக்க முயற்சி.. நடிகர் திலீப் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு!
கொச்சி: பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வழக்கில் நடிகர் திலீப் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரபல மலையாள நடிகை ஒருவர், கடந்த 2017 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக புகார் எழுந்தது.
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடித்து வந்த நடிகை அவர். இந்தச் சம்பவம் தென்னிந்திய சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திலீப் மனு தள்ளுபடி
இதில் தொடர்புடையதாகக் கூறி, மலையாள நடிகர் திலீப்பை கைது செய்த போலீசார், கொச்சி ஆலுவா சிறையில் அடைத்தனர். 85 நாட்கள் சிறையில் இருந்த திலீப், பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை, கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றத்தில் திலீப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சிறப்பு நீதிமன்றம்
மேலும், இந்த வழக்குத் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை 6 மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதனால் வழக்கு விசாரணை, சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்தது. 136 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர்.

ரம்யா நம்பீசன்
பாதிக்கப்பட்ட நடிகை, அவரது சகோதரர், நடிகரும் இயக்குனருமான லால், நடிகை ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், காவ்யா மாதவனின் அம்மா, ஷ்யாமளா, நடிகர் இடவேளை பாபு உட்பட பல நடிகர், நடிகைகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட லாக்டவுனால் இந்த விசாரணை மார்ச் மாதம் 24 ஆம் தேதியோடு நிறுத்தப்பட்டது.

சிறப்பு நீதிமன்றம்
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கான காலத்தை மேலும் ஆறு மாதம் நீட்டிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. அதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. கேரளாவில் கொரோனா கட்டுக்குள் இருப்பதை அடுத்து, கடந்த ஜூன் மாதம் முதல் மீண்டும் விசாரணை தொடங்கி நடந்து வருகிறது.
Recommended Video

ஜாமீனை ரத்து செய்ய
இந்நிலையில், நடிகர் திலீப், சாட்சிகளை கலைப்பதாகக் கூறி, அவர் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த மனு மீதான விசாரணை, சிறப்பு நீதிமன்றத்தில் நாளை நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications











