பிரபல நடிகை கடத்தப்பட்ட வழக்கு.. கொரோனாவால் தாமதம்.. மேலும் அவகாசம் கேட்கும் சிறப்பு நீதிமன்றம்!
கொச்சி: பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கை விசாரிக்க இன்னும் கால அவகாசம் தேவை என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்த பிரபல நடிகை, கடந்த 2017 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக புகார் எழுந்தது.
இந்தச் சம்பவம் கேரள மட்டுமின்றி தமிழ், தெலுங்கு சினிமா உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் திலீப் கைது
நடிகையை கடத்திய பல்சர் சுனில் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். நடிகர் திலீப்புக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் கூலிப்படையை வைத்து அவர்தான் இந்தக் கடத்தலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து நடிகர் திலீப்பை கைது செய்த போலீசார், கொச்சி ஆலுவா சிறையில் அடைத்தனர். 85 நாட்கள் சிறையில் இருந்த திலீப் பின்னர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

6 மாதத்துக்குள்
இந்த வழக்கு கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றத்தில் திலீப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் அவர், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை 6 மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று கடந்த வருடம் நவம்பர் மாதம் உத்தரவிட்டனர்.

நடிகை மஞ்சு வாரியர்
இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்தது. இந்த வழக்கு தொடர்பாக, பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. நடிகைகள், ரம்யா நம்பீசன், காவ்யா மாதவன், அவர் தாய், நடிகை மஞ்சு வாரியர் உட்பட பலர் சாட்சியம் அளித்தனர். மேலும் பலர் சாட்சியம் அளிக்க இருந்தனர். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் பிரச்னை ஏற்பட்டதால் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதி
இதன் காரணமாக, வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த முடியவில்லை. இதனால் இந்த வழக்கு விசாரணையை நடத்த மேலும் 6 மாத கால அவகாசம் வேண்டும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹனி எம். வர்கீஸ், உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த கோரிக்கை பற்றி வரும் செவ்வாய்க்கிழமை, ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு விசாரிக்க உள்ளது.


Click it and Unblock the Notifications











