சிவராஜ்குமாரோட ஒரு படம் பண்றேன்.. விஜய்க்கு ஆல் தி பெஸ்ட்.. நச்சென பேசிய நடிகை பாவனா!
சென்னை: தமிழில் வெயில், தீபாவளி, ஆர்யா, அசல், ஜெயம் கொண்டான் என பல படங்களில் நடித்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நடிகை பாவனா கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார். அவருக்கு நேர்ந்த கசப்பான சம்பவம் காரணமாக சினிமாவுக்கு பிரேக் கொடுத்திருந்த பாவனா சமீப காலமாக மீண்டும் நடித்து வருகிறார்.
10 ஆயிரம் சிசிடிவிக்களை சென்னையில் பல்வேறு இடங்களில் நிறுவும் நிகழ்ச்சிக்காக சிறப்பு விருந்தினராக நடிகை பாவனா விமானம் மூலம் வந்த நிலையில், அவரை சந்தித்த பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பக்காவாக பதில் அளித்தார்.

சிசிடிவி பெண்களுக்கும், கொள்ளை சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும் ரொம்பவே பாதுகாப்பாக இருப்பதாக பேசிய பாவனா விஜய் அரசியல் குறித்த கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.
அஜித்துடன் அசல்: ஜெயம் ரவியுடன் தீபாவளி படத்தில் நடித்த பாவனாவை அவ்வளவு எளிதில் ரசிகர்கள் மறந்துவிடமாட்டார்கள். நடிகர் அஜித்துடன் இணைந்து அசல் படத்திலும் அட்டகாசமாக நடித்திருந்தார் பாவனா. மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வந்த பாவனா பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடிக்காமலே ஒதுங்கியிருக்கிறார்.

சிவராஜ்குமார் படத்தில் நடிக்கிறேன்: புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார் சிவராஜ்குமார் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அவர் நடிப்பில் உருவாகி வரும் படங்கள் கிடப்பில் கிடக்கின்றன. சென்னைக்கு வந்த நடிகை பாவனா இப்போ சிவராஜ்குமார் படத்தில் நடித்து வருகிறேன். மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன் எனக் கூறியுள்ளார். தமிழில் இப்போதைக்கு படங்களில் ஏதும் நடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். உத்தரகாண்டா எனும் படத்தில் தான் சிவராஜ்குமார் உடன் இணைந்து பாவனா நடித்து வருகிறார். ஏற்கனவே இவர் சிவராஜ்குமார் உடன் இணைந்து பஜரங்கி 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

விஜய்க்கு ஆல் தி பெஸ்ட்: நடிகர் விஜய் அரசியல் குறித்து சில பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப, அது அவரோட முடிவு அதில், நான் என்ன கருத்து சொல்வது எனக் கேள்வியெழுப்பிய பாவனா நல்லது செய்வதற்காக அரசியலுக்கு வரும் அவருக்கு ஆல் தி பெஸ்ட் என்று வேண்டுமானால் சொல்கிறேன் என பேசிவிட்டு சென்றார்.



Click it and Unblock the Notifications











