5 வருஷ ஏமாற்றம்.. துரோகம்.. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை மகளிர் ஆணையத்தில் புகார்!
சென்னை: கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் மீது, நடிகை சாந்தினி கொடுத்திருந்த ஐந்து ஆண்டுகால குடும்ப வாழ்க்கை மற்றும் கட்டாயக் கருக்கலைப்பு தொடர்பான மோசடிப் புகார், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தனக்குச் செய்த நம்பிக்கை துரோகங்களையும், மகளிர் ஆணையத்தில் இன்று நடந்த பரபரப்புச் சம்பவங்களையும் கண்ணீருடன் விவரித்துள்ளார்.
3 முறை கட்டாயக் கருக்கலைப்பு: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்தோம். அந்த காலகட்டத்தில் தான் 3 முறை கர்ப்பமடைந்ததாகவும், ஆனால் மணிகண்டன் தன்னை வலுக்கட்டாயமாகத் தொந்தரவு செய்து கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், தன்னைத் திருமணம் செய்ய மறுப்பதோடு தங்களின் தனிப்பட்ட புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என மிரட்டுவதாகவும் ஏற்கனவே சாந்தினி புகார் அளித்திருந்தார்.

பெட்ரோல் பாம் வீச்சு: இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சாந்தினி, கடந்த 2021-ஆம் ஆண்டு மணிகண்டன் தன்னுடைய ஆட்களை வைத்து எங்களது வீட்டில் பெட்ரோல் பாம் அடித்தார். இந்த வழக்குத் தொடர்பாக தி.நகர் முன்னாள் கவுன்சிலர் ராமநாதன் என்பவர் என்னைச் சந்தித்துப் பேசினார். அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ராஜ்யசபா எம்பி பதவி கொடுக்கப் போகிறார்கள். அதனால் உன்னுடைய வழக்கை வாபஸ் வாங்கிக்கொள் என்று சொன்னார். முதலில் நான் அதை நம்பவில்லை.
நம்பவைத்து ஏமாற்றிவிட்டார்: அதன் பிறகு மணிகண்டனே என்னை நேரடியாகச் சந்தித்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். உன்னுடைய வாழ்வாதாரத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை நான் எல்லாவற்றையும் செய்து கொடுக்கிறேன் என்று உறுதியளித்தார். அவர் சொன்ன வார்த்தைகளை நம்பித்தான் நான் வழக்கை வாபஸ் பெற்றேன். ஆனால், நான் வழக்கை வாபஸ் பெற்ற இரண்டே நாட்களில் மணிகண்டனுடைய அனைத்து போன்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டன. கடந்த நான்கு ஆண்டுகளாகவே அவரை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஐயா அவர்களிடமும் நான் மனு கொடுத்திருக்கிறேன். ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வழக்கறிஞர்கள் மிரட்டல் ரகளை: இதனைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தேன். தேர்தல் நேரம் என்பதால் வழக்கை எடுக்க முடியாத சூழல் நிலவிய நிலையில், கடந்த ஜூன் 10-ஆம் தேதி மணிகண்டனுக்கு முதல் சம்மன் அனுப்பப்பட்டது. அப்போது அவர் ஆஜராகாமல், அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி அடுத்த முறை நிச்சயமாக அவர் வருவார் என்று கூறினர். அதன் அடிப்படையில் இன்று இரண்டாவது சம்மன் அனுப்பப்பட்டும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆஜராகவில்லை. மாறாக, அவரது வழக்கறிஞர்கள் மகளிர் ஆணைய அலுவலகத்திற்குள் வந்து பெரும் பிரச்சனையில் செய்கிறார்கள். மணிகண்டனின் வழக்கறிஞர்கள் மகளிர் ஆணைய அதிகாரியையே மிரட்டுகிறார்கள். முதலமைச்சர் மீது யாராவது மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்தால் வழக்கை உடனடியாக எடுத்துக் கொள்வீர்களா? மணிகண்டன் ஒரு முன்னாள் அமைச்சர், சாந்தினி ஏற்கனவே இந்த வழக்கை வாபஸ் வாங்கிவிட்டார், அப்படி இருக்கும்போது இந்த வழக்கை நீங்கள் மீண்டும் விசாரிக்க முடியாது என்று கூறி பெரும் ரகளை செய்தார்கள்.
நம்பிக்கை துரோகம் மற்றும் மோசடியால் தான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். அதற்கான மருத்துவச் சான்றிதழ்களை மகளிர் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும், தனக்கு நீதி வேண்டும் என்றும் சாந்தினி கண்ணீர்மல்கக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications