பிரபல நடிகை சித்ரா மாரடைப்பால் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்!
சென்னை: சேரன் பாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை சித்ரா மாரடைப்பால் காலமானார் அவருக்கு வயது 56.
Recommended Video
கேரள மாநிலம் கொச்சியை பூர்விகமாக கொண்டவர் நடிகை சித்ரா. கே.பாலசந்தரால் அபூர்வராகங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
தொடர்ந்து அவள் அப்படித்தான் என்ற படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் சித்ரா. மலையாள சினிமாவிலும் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

அட்டகலஷம் படத்தில் லீடிங் ரோல்
மலையாள மொழியில் 1983ஆம் ஆண்டு வெளியன அட்டகலஷம் படத்தில் பிரேம் நஸீர் மற்றும் மோகன் லாலுடன் முதல் முறையாக லீடிங் ரோலில் நடித்தார் சித்ரா. தொடர்ந்து பிரேம் நஸீர், மோகன் லால், மம்மூட்டி, திலீப், சுரேஷ் கோபி, ஜெயராம் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் சித்ரா. மலையாள மொழியில் மட்டும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் கமலின் ராஜபார்வை படம்
தமிழில் கமலின் ராஜ பார்வை படத்தில் சுலோச்சனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். மேலும் ரஜினிகாந்த், கமல், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், பார்த்திபன், சரவணன், ராமராஜன், பாண்டியராஜன் என முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

ஊர்க்காவலன்.. சேரன் பாண்டியன்..
தமிழில் அவரது நடிப்பில் வெளியான பொண்டாட்டி ராஜ்ஜியம், சின்னவர், பாரம்பரியம், திருப்புமுனை, ஊர்க்காவலன், சேரன் பாண்டியன், பெரிய குடும்பம், வீட்டை பாரு நாட்டை பாரு, மகுடிக்காரன், கோபாலா கோபாலா, கபடி கபடி, காதல் செய்ய விரும்பு உட்பட பல படங்கள் அவருக்கு பாராட்டை பெற்றுக் கொடுத்தன.

ஊர்க்காவலனில் இளம் விதவையாக
சேரன் பாண்டியன் படத்தில் சரத்குமார், விஜயகுமாருக்கு பாசமிகு தங்கையாக நடித்து அவர்களின் உயிரை காக்க தனது உயிரை விடும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் சித்ரா. இதேபோல் ஊர்க்காவலன் படத்தில் ரஜினிகாந்தின் தம்பி மனைவியாக இளம் விதவையாக நடித்திருந்தார் சித்ரா.

30 ஆண்டுகளாக சினிமாவில்..
தமிழ் மட்டுமின்றி மலையாள சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார் சித்ரா. இதேபோல் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார். 30 ஆண்டுகளாக சினிமாவில் ஆக்டிவாக இருந்த சித்ரா 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

எங்க சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா
சினிமா மட்டுமின்றி சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் கடந்த ஆண்டு எங்க சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் பிளாஷ் பேக் காட்சியில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார் சித்ரா. இந்த படம் கடந்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி வெளியானது.

மகாலக்ஷ்மி என்ற மகள்
நடிகை சித்ரா 1990ஆம் ஆண்டு விஜயராகவன் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு மகாலக்ஷ்மி என்ற மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகு அதிக படங்களில் தலைக்காட்டாமல் இருந்த சித்ரா சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் குடும்பத்தினருடன் சென்னையில் செட்டிலானார் சித்ரா.

நேற்றிரவு மாரடைப்பு - திடீர் மரணம்
சென்னை சாலிகிராமத்தில் தனியார் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தார். சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வந்த நிலையில் நடிகை சித்ராவுக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். 56 வயதே ஆன சித்ராவின் திடீர் மரணம் தமிழ் மற்றும் மலையாள சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திடீர் மரணம் - அதிர்ச்சி.. இரங்கல்..
அவரது மறைவுக்கு தமிழ் மற்றும் மலையாள சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் மற்றும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











