நடிகை தீபா தற்கொலைக்கு முன் காதலனுடன் சண்டை..விசாரணையில் சிக்கிய காதலனுக்கு போலீஸ் சம்மன்!
சென்னை : வாய்தா பட நடிகை தற்கொலை வழக்கில் அவரின் காதலன் சிராஜுதினுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
ஆந்திராவைச் சேர்ந்த பவுலின் என்கிற தீபா சென்னை விருகம்பாக்கத்தில் மல்லிகை அவென்யூ பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார் .
இவர் சனிக்கிழமை வீட்டின் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நடிகை பவுலின்
இயக்குநர் மகிவர்மன் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் வாய்தா. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தீபா என்கிற ஜெஸிகா பவுலின். இவர் விஷாலின் துப்பறிவாளன் படத்திலும் ஒரு சிறு வேடத்தில் நடித்துள்ளார். 29 வயதான தீபா, தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போலீசார்,உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காதலன் யார்
இதையடுத்து, வீட்டில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், தற்கொலைக்கு முன்பு தீபா எழுதி கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், உயிருக்கு உயிராக ஒருவரை காதலித்தேன், அந்த காதல் நிறைவேறாததால் உலகத்தைவிட்டு செல்கிறேன். என் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதி வைத்துள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், காதலன் யார் என விசாரணை நடத்தினர்.

காதலருக்கு சம்மன்
தீபாவின் செல்போனை கைப்பற்றி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சிராஜுதினிடம் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவர் காதலரிடம் பேசியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து தீபாவின் காதலர் சிராஜுதினுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

ஐபோனை காணவில்லை
மேலும், தீபாவின் சகோதரர் ராமேஷ், தனது சகோதரி நான்கு செல்போன் வைத்திருந்ததாகவும் அதில் ஐபோனை காணவில்லை என்றும், இரண்டு நாட்களுக்கு முன் அவளிடம் பேசினேன் அவர் மகிழ்ச்சியாகவே இருந்தார் என்று கூறியிருந்தார். இதையடுத்து, குடியிருப்பில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்த போலீஸார், அவரது வீட்டிற்கு யார், யாரெல்லாம் வந்து சென்றுள்ளனர் என்ற தகவல்களையும் சேகரித்தனர்.

தீவிர விசாரணை
தீபா தற்கொலை செய்து கொண்ட தகவலை காதலன் சிராஜுதீன் மூலமாக தெரிந்து கொண்ட அவரது நண்பர் பிரபாகரன் நடிகை தீபாவின் வீட்டிற்கு பதற்றத்தோடு ஓடிவரும் சிசிடிவி காட்சியும் வெளியாகி உள்ளது. இதையடுத்து சிராஜுதீன் அவரது நண்பர் பிரபாகரன் ஆகியோரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

காதலனுக்கு சம்மன்
இந்த நிலையில், நடிகை தீபா தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தீபாவின் காதலன் சிராஜுதின் போலீஸ் விசாரணைக்கு இன்று வருமாறு போலீசார் அழைத்திருந்தனர். ஆனால், அவர் இன்று விசாரணைக்கு வராததால் நாளை நேரில் ஆஜராக கோயம்பேடு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். காரைக்குடியில் படப்பிடிப்பில் இருக்கும் சிராஜூதீன், நாளை சென்னையில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

திருமணமானவர்
நடிகை தீபாவின் காதலன் சிராஜுதீனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தை இருக்கும் நிலையில், அவர் தீபாவுடன் பழகி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. பிரேதப் பரிசோதனை முடிந்து நடிகை தீபாவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஆந்திராவுக்கு கொண்டு செல்லப்பட்டது.


Click it and Unblock the Notifications











