கூடவே இருப்பார்னு நினைச்சோம்..போண்டா மணி இழப்பை தாங்க முடியால.. கதறி அழுத நடிகை!
சென்னை: போண்டா மணி இழப்பை தாங்கவே முடியவில்லை என்று இறுதி சடங்கில் நடிகை ஒருவர் கதறி அழுதுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த போண்டா மணி, நடிகர் பாக்யராஜின் பவுனு பவுனுதான் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து பொன்விலங்கு, பொங்கலோ பொங்கல், சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா, வசீகரா என 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சுந்தரா டிராவல்ஸ் படத்தில் மாப்பிள்ளை காமெடி மூலம் பிரபலமான இவர், வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு நகைச்சுவை காட்சிகளில் நடித்ததால், பட்டித்தொட்டி எங்கும் பாப்புலர் ஆனார் போண்டா மணி.

போண்டா மணி மரணம்: கடந்த ஓராண்டாகவே சிறுநீரகப் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு திரையுலகினர் பண உதவி செய்தனர். மாதா மாதம் டயாலிசிஸ் செய்து வரும் போண்டா மணி, நேற்றிரவு தனது வீட்டில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போண்டா மணியின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விஜய்காந்த் இரங்கல்: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவு போடப்பட்டு இருக்கிறது. பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையுமடைந்தேன். என் மீது மிகுந்த அன்பும், நட்பும், மரியாதையும் கொண்ட நல்ல மனிதர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மற்றும் நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
என் அண்ணன் மாதிரி: இந்நிலையில், சென்னை பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் நடிகர் போண்டா மணி குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், அவரின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகை தேவிஸ்ரீ, போண்டா மணியை எனக்கு இருபது வருஷமா தெரியும் அவர் என் அண்ணன் மாதிரி. நல்லாத்தான் இருந்தாரு திடீரென இப்படி ஆகிவிட்டது. இப்படி ஆகும் என்று யாரும் நினைக்கவில்லை. அவருடன் நான் மூன்று படத்தில் நடித்து இருக்கிறேன். இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் படம் முழுக்க அவருடன் இணைந்து நடித்து இருக்கிறேன்.
கதறி அழுத நடிகை: ரொம்ப ஜாலியான மனிதர் அவர். அவர் இறந்துவிட்டார் என்று நினைக்கும் போது மனசு மிகவும் வலிக்கிறது. அவர் எங்களுடன் இணைந்து பல படத்தில் நடிக்க வேண்டும் என்று அனைவரும் நினைத்தோம். ஆனால், இவ்வளவு சீக்கிரம் இறந்துவிடுவார் என்று நாங்க நினைத்துக்கூட பார்க்கவில்லை. அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்று நடிகை தேவிஸ்ரீ கதறி அழுதபடி பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications