லாக்டவுனால் தவிப்பு.. நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவிய மூத்த நடிகை.. குவியும் பாராட்டு!
சென்னை: லாக்டவுன் காரணமாக வேலையில்லாமல் தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நடிகை ஜெயச்சித்ரா தனது சொந்த செலவில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் உச்சத்தை தொட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் மட்டும் 36 ஆயிரத்தை தாண்டியது. இதேபோல் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

உயிரிழப்புகள் அதிகரிப்பு
நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 460க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகள் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா தொழிலாளர்கள்
இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் சினிமா தொழில் முடங்கியுள்ளதால் பல சினிமா தொழிலாளர்கள் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடிகர் நடிகைகளுக்கு கோரிக்கை
இதனையறிந்த தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ்.முருகன் கொரோனா ஊரடங்கால் பணி இன்றி தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிக, நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அத்தியாவசியப் பொருட்கள்
நடிகை ஜெயசித்ரா அதனை ஏற்று 200க்கும் மேற்பட்ட தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தனது சொந்த செலவில் வழங்கியுள்ளார். ஃபெப்சி தலைவரான ஆர்கே செல்வமணி, முன்னணி நடிகர் நடிகைகள் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











