Jyotika: ஜோதிகா நடிக்கும் வெப்தொடர்.. கோலிவுட்டுக்கு வர வாய்ப்பே இல்ல.. ஜோ சொன்ன பதிலை கேளுங்க!
சென்னை: நடிகை ஜோதிகா நடித்திருக்கும் வெப் தொடரான டப்பா கார்டெல் வரும் 28ந் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. ஷபானா ஆஸ்மி, நிமிஷா சஜயன் என பலர் இதில் நடித்துள்ளனர். இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த, நடிகை ஜோதிகா, தனது சினிமா வாழ்க்கை குறித்தும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பல விஷயத்தை பேசி உள்ளார்.

கேள்வி: சினிமாவில் உங்கள் பயணத்தை எப்படி விவரிப்பீர்கள்?
சினிமாவில் என்னுடைய பயணத்தில் வளர்ச்சியைத் தவிர வேறில்லை. நடிகையாக வளர வேண்டும் என்று நினைத்து மொழி மாறினேன். கடந்த பத்தாண்டுகளில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறேன். நான் எப்போதும் எனது படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன் என்பதால், என் வளர்ச்சி என்பது சிறப்பாகவே உள்ளது.
கேள்வி: டப்பா கார்டெல் வெப் தொடரில் நடித்தது ஏன்?
டப்பா கார்டல் கதையை கேட்டதும் அது என்னை ஈர்த்துவிட்டது. அதுமட்டுமில்லாமல், பேனர், எக்செல் என்டர்டெயின்மென்ட், அவர்கள் சில சிறந்த வலைத் தொடர்களை உருவாக்குவதற்குப் பெயர் பெற்றவர்கள் என்பது இதில் நடிக்க ஒரு முக்கிய காரணம். மேலும், இந்த தொடரில் நான் வருணா என்ற ரோலில் நடித்துள்ளேன். இந்த கேரக்டரை பற்றி கேட்டதும் எனக்கு பிடித்துவிட்டது. அது மட்டுமில்லாமல், இதில், ஷபானா ஆஸ்மி மேடமும் நடித்து இருக்கிறார், அவர் ஒரு சிறந்த நடிகை மட்டுமல்ல, ஒரு மகத்தான ஆளுமையும் கூட; அவர்களின் அருகில் நிற்பதால் நானும் மிகவும் அதிகாரம் பெற்றவராக உணர்கிறேன்.
ஷபானா ஆஸ்மி மட்டுமில்லாமல், டப்பா கார்டலில் மற்றொரு திறமையான நடிகையுடன் நடித்து இருக்கிறேன். அவர் தான் நிமிஷா சஜயன், அவருடைய நடிப்பு எனக்கு எப்போதும் பிடிக்கும், அவர் நடித்த, தி கிரேட் இந்தியன் கிச்சன் அவருடைய படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது.
கேள்வி: நீங்கள் நடித்த படங்களில் மிகவும் பிடித்த படம் எது?
நான் நிறைய வேடங்களில் நடித்திருக்கிறேன், ஆனால் நான் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்த மொழி படம் எனக்கு பிடித்தமான படமாகும். அந்த படம் எனக்கு ஒரு மைல்கல் படமாகும். மேலும் எனது இரண்டாவது இன்னிங்சை தொடங்க காரணமாக இருந்த 36 வயதினிலே, ராட்சசி, நான் வக்கீலாக நடித்த பொன்மகள் வந்தாள் போன்றவை எனக்கு பிடித்தமான படங்களாகும்.
கேள்வி: இந்தியில் சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய உங்களுக்கு, ஏன் தமிழ் சினிமா மீது ஈர்ப்பு ஏற்பட்டது?
பிரியதர்ஷன் இயக்கிய டோலி சஜா கே ரக்னா என்ற ஹிந்திப் படத்தில் நான் முதன் முதலாக நடித்தேன். அந்த படத்தில் அக்ஷய் கண்ணா நடித்திருந்தார். ஆனால், படம் நன்றாக ஓடவில்லை இதனால், இந்தியில் பட வாய்ப்பு இல்லை. அப்போது தான், நான் டோலி சஜா கே ரக்னா படப்பிடிப்பில் இருந்தபோது, தமிழ் படத்தில் ஒப்பந்தம் ஆனேன். அது தான், என் கணவர் சூர்யாவுடன் நான் நடித்த முதல் படமாகும். அந்த படமும் சுமாராகத்தான் சென்றது. ஆனால், தமிழக மக்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











