Actress Kanaga: எதுக்காக பேட்டி கொடுக்கனும்.. தனிமைக்கான காரணத்தை சொன்ன நடிகை கனகா!
சென்னை: நடிகை தேவிகாவின் மகளான கனகா, கரகாட்டக்காரன் படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர்.
தொடர்ந்து ரஜினி, விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த கனகா பிசியான நடிகையாக இருந்தார்.
தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துவந்த கனகாவிற்கு அவரது தாயின் மரணம் மிகப்பெரிய வேதனையை கொடுத்த நிலையில் படவாய்ப்புகளும் குறைந்தது.

நடிகை கனகா: நடிகை தேவிகா தமிழில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். இவரது மகள் கனகாவும் முன்னணி நடிகையாக கடந்த 90களின் காலகட்டத்தில் நடித்து வந்தார். கடந்த 1989ம் ஆண்டில் ராமராஜன் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த கனகாவிற்கு அந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. தொடர்ந்து ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துவந்தார் கனகா.
முன்னணி நடிகை: தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகையாக வலம்வந்தார் கனகா. ரசிகர்கள் இவரை கொண்டாடினர். ஒரு கட்டத்தில் தன்னுடைய தாயை இழந்த கனகா, மிகுந்த மனவேதனையில் இருந்தார். படவாய்ப்புகளும் குறைந்த நிலையில், தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். ஒரு சமயத்தில் அவர் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. கடைசியாக விரலுக்கேற்ற வீக்கம் என்ற தமிழ் படத்தில் நடித்துள்ள கனகா, 2000ம் ஆண்டில் இரு மலையாளப் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் ஒதுங்கிய கனகா: கடந்த 23 ஆண்டுகளாக இவர் சினிமாவில் நடிக்கவில்லை. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை கனகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளத்தில் நடிகை குட்டி பத்மினி பகிர்ந்திருந்தார். அதில் ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போயிருந்தார் கனகா. இவரைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தற்போது இவர் கவனத்திற்குரியவராகியுள்ளார்.
கனகா மகிழ்ச்சி: பல யூடியூப் சேனல்களும் கனகாவை போட்டிப் போட்டுக் கொண்டு பேட்டி கண்டு வருகின்றன. அப்படி கனகா கொடுத்துள்ள சமீபத்திய பேட்டியில், தற்போது சினிமா அதிகமான மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தான் நடிக்க வந்தபோது தன்னை பார்த்து என்னம்மா கன்னம் ஒட்டிப் போயிருக்கிறதே, ஒல்லியாக இருக்கிறாய் என்று பலரும் தன்னை விமர்சித்ததாகவும் டயலாக் இப்படி பேச வேண்டும் என்றெல்லாம் கற்பித்ததாகவும் அவர் கூறியுள்ளர்.
தனிமைக்கான காரணம்: இப்பொழுது நாயகிகள் கேஷுவலாக நடிப்பதாகவும் அதையும் ரசிகர்கள் ரசிப்பதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். தான் இன்னும் அதே வீட்டில் தனிமையில்தான் இருப்பதாகவும் மற்றவர்களுடன் பேசக்கூடாது, பழகக்கூடாது என்ற எண்ணம் தனக்கு கிடையாது என்றும் தான் என்ன பிசியாக இருக்கிறோம் எதற்காக பேட்டி கொடுக்க வேண்டும் என்று தன்னுடைய மனசாட்சி கேள்வி கேட்கும் என்றும் அதனால்தான் ஒதுங்கியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அது சரியாக இருக்காது: ஒரு காலகட்டத்தில் அதிகமான படங்களில் நடித்துவந்ததால் அந்தப் படங்கள் குறித்து பேசுவதற்கு, பகிர்வதற்கு அதிகமான விஷயங்கள் இருந்ததாகவும் ஆனால் தற்போது எதுவும் இல்லாத சமயத்தில் தானாக முன்வந்து பேட்டி கொடுக்கிறேன் என்பது சரியாக இருக்காது என்றும் கனகா தெரிவித்துள்ளார். தற்போது தன்னை குறித்த ஒரு செய்தி வந்ததால், தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் பேட்டிகளை கொடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











