கனகா மீது வெறுப்பு இருந்தது.. இப்போது வந்தாலும் ஓகேதான்.. 88 வயது தந்தை உருக்கம்
சென்னை: நடிகை கனகா 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர். இன்னும் பல வருடங்கள் தொடர்ந்து டாப் இடத்தில் எதிர்பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திடீரென காணாமல் போனார் கனகா. அதனையடுத்து அவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. இதனையடுத்து நடிகை குட்டி பத்மினி கனகாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதனையடுத்து மீண்டும் கனகா குறித்து ரசிகர்கள் அதிகம் பேச ஆரம்பித்தனர். இந்தச் சூழலில் கனகாவின் தந்தை அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா. இவர் கரகாட்டக்காரன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பெரிய விருப்பம் எதுவும் இல்லாமல்தான் கனகா நடிப்பதற்கு தேவிகா ஒத்துக்கொண்டார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக கரகாட்டக்காரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதன் காரணமாக கனகா தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்டார். தொடர்ந்து பட வாய்ப்புகளும் கிடைத்தன.
பிஸியான கனகா: தமிழில் முதல் படம் ஹிட்டான பிறகு ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார் கனகா. அதேபோல் தெலுங்கிலும் பல படங்களில் புக் ஆனார். இதன் காரணமாக நிற்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தார் அவர். சூழல் இப்படி இருக்க திடீரென அவர் காணாமல் போனார். ஒருகட்டத்தில் கனகா உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதுகூட ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்தது.

தனிமையான கனகா: அவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார். யாரையும் சந்திப்பதில்லை, வெளியே வருவதில்லை என்று ஏகப்பட்ட விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அதற்கு காரணம் தேவிகாவின் மரணம் ஒன்று என்றும் இன்னொரு காரணம் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த காதல் தோல்வி என்றும் பேசப்பட்டது. இருந்தாலும் கனகா பத்திரிகையாளர்களையோ சினிமாக்காரர்களையோ சந்திக்கவே இல்லை.
குட்டி பத்மினி என்ட்ரி: இப்படிப்பட்ட சூழலில்தான் இந்த விஷயத்துக்குள் நடிகை குட்டி பத்மினி வந்தார். கனகாவின் வீட்டுக்கு வெளியே நீண்ட நேரம் காத்திருந்து அவரை எப்படியோ சந்தித்துவிட்டார். இரண்டு பேரும் அருகில் இருக்கும் காஃபி ஷாப் ஒன்றுக்கு சென்று நீண்ட நேரம் பேசியிருந்துவிட்டு கலைந்தனர். அப்போது கனகாவுக்கு குட்டி பத்மினி முத்தம் கொடுக்கும்படியான புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகின. அதனையடுத்து குட்டி பத்மினிக்கு கனகா பேட்டி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
கனகா தந்தை பேட்டி: இந்நிலையில் கனகாவின் தந்தையான தேவதாஸ் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "எனது மனைவியை நான் காதலித்துதான் திருமணம் செய்துகொண்டேன். ஆனால் திருமணத்துக்கு பிறகு என்னை அவர் வேலைக்காரனை போல் வைத்திருந்தார். மதியாதார் தலை வாசல் மிதியாதே என்பதற்கேற்ப நான் விலகிவிட்டேன். கனகா பிறந்து மூன்று வயதுவரை நாங்கள் ஒன்றாகத்தான் இருந்தோம். அதற்கு பிறகு பிரிந்துவிட்டோம். அதேபோல் எங்கள் இரண்டு பேருக்குள்ளும் சட்டப்பூர்வமான விவாகரத்து நடைபெறவில்லை.
கனகா நடிக்க வந்தபோது அவருக்கு 17 வயதுதான் ஆனது. அந்த வயதில் அவர் நடிப்பதைவிடவும் படிக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். அதன் காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். ஆனால் தனக்கு நடிப்பதில்தான் விருப்பம் என்று கனகா கூறினார். இதனால் அவர் மீது எனக்கு வெறுப்பு வந்துவிட்டது. எனவே அவர் நடித்த படங்களை தியேட்டர்களுக்கு சென்று பார்த்ததே இல்லை. எனக்கு 88 வயது ஆகிறது. இப்போது கனகா வந்தாலும் நான் அவரை பாதுகாக்க தயாராகத்தான் இருக்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











