தினமும் 3 மணி நேரம் மேக்கப்... சாவித்திரிக்காக கீர்த்தி பட்டபாடு!
Recommended Video

சென்னை: மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை தமிழில் 'நடிகையர் திலகம்' என்ற பெயரிலும், தெலுங்கில் 'மகாநதி' என்ற பெயரிலும் திரைப்படமாக தயாராகி உள்ளது.
இந்தப் படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ், சாவித்திரியின் கணவர் ஜெமினிகணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளனர்.
சமந்தா, விஜய் தேவரகொண்டா, நாகசைதன்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

அடுத்த மாதம்
இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கி உள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் திரைப்பட நகரில் 1950 மற்றும் 60 காலகட்டத்து அரங்குகள் அமைத்து இதன் படப்பிடிப்பை நடத்தினர். அந்த காலத்து ஆடைகள், நகைகள் உள்ளிட்ட பொருட்களையே பயன்படுத்தினர். அடுத்த மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

எதிர்ப்பு
இந்தப் படத்தில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதை பழம்பெரும் நடிகை ஜமுனா உள்ளிட்டோர் எதிர்த்தனர். ஆனால் அது தவறு என நிரூபிக்கும் வகையில் உள்ளது கீர்த்தியின் தோற்றம்.

ஆ.. அதே சாவித்ரி
கிட்டத்தட்ட சாவித்திரியின் தோற்றத்தை கீர்த்தி முகத்தில் கொண்டுவந்திருக்கிறார்கள். அறுபதுகளில் கொடிகட்டிப் பறந்த அந்த சாவித்திரியைப் பார்ப்பது போலிருக்கிறது என்பதே திரைத்துறையினரின் கருத்தாக உள்ளது.

எப்படி இது சாத்தியமானது?
கீர்த்தி சுரேஷிடம் கேட்டபோது, "சாவித்திரியின் தோற்றம் எனக்கு வராது... சாவித்திரி மாதிரி நடிக்க முடியாது என்றெல்லாம் என் காதுபடவே பலர் சொன்னார்கள். ஆனால் எனக்கு பெரிய நம்பிக்கை இருந்தது. சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை முழுவதுமாக படித்தும் அவர் நடித்திருந்த படங்களை பார்த்தும் அவர் பாணியைக் கற்றுக் கொண்டேன்.

மேக்கப்
சாவித்திரி மாதிரி தோற்றம் வேண்டும் என்பதற்காக தினமும் 3 மணி நேரம் மேக்கப் போட்டேன். அவரது உடல் மொழி வர வேண்டும் என்பதற்காக பயிற்சிகளும் எடுத்தேன். எந்த வகையில் சாவித்திரி போல இல்லை என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக ரொம்பவே மெனக்கெட்டேன். இன்று வெளியாகியுள்ள எனது சாவித்திரி கெட்டப்புக்கு பெரிய அளவில் பாராட்டு கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது," என்றார்.


Click it and Unblock the Notifications











