நல்லா ரெஸ்ட் எடுங்க.. உங்கள் மனதுக்கு தேவைப்படுகிறது.. கஸ்தூரிக்கு பதிலடி கொடுத்த குஷ்பு!
சென்னை: குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக நடிகைகள் குஷ்பும் கஸ்தூரியும் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கிய போராட்டம் தென் மாநிலங்களுக்கும் பரவியுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக திரை பிரபலங்கள் பலரும் எதிராகவும் ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் குடியுரிமை சட்ட திருத்த விவாகரம் தொடர்பாக நடிகை குஷ்பு பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் கடுமையாக சாடினார்.

நீங்கள் யார்?
இதுதொடர்பாக குஷ்பு பதிவிட்ட டிவிட்டில் யார் நாட்டின் குடிமகன், யார் குடிமகன் இல்லை என்பதைத் தீர்மானிக்க நீங்கள் யார் அமித்ஷா? நமது நாட்டின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் அழிக்கும் ஆணைகளை தர நீங்கள் யார்? அகதிகள், அந்நியர்கள் என்று நீங்கள் அழைப்பவர்கள்தான் உங்களை ஆட்சியில் அமர வைக்க வாக்களித்தவர்கள். இந்த நாடு மதச்சார்பின்மையில் வாழ்கிறது. மதத்தில் அல்ல என்று பதிவிட்டிருந்தார்.

எப்படி அகதிகள்?
குஷ்புவின் பதிவை பார்த்து டென்ஷனான கஸ்தூரி, எனக்கு குழப்பமாக இருக்கிறது. எப்படி ஓட்டுப் போடும் குடிமக்கள் அந்நியர்களாக, அகதிகளாக இருக்க முடியும்? இந்திய வாக்காளர் பட்டியலில் இருப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட குடிமக்களே. ஏதோ இந்தியர்களுக்கு அவர்கள் குடியுரிமையே பறிக்கப்படுவதை போல பேசுகிறீர்கள்.

மதரீதியான வழிமுறை அல்ல
அந்த பொய்யை நீங்கள் நம்புகிறீர்கள் என்றால் நீங்கள் சி.ஏ.பி. குறித்து ஒழுங்காக தெரிந்துகொள்ள வேண்டும். குஷ்பு உட்பட பல பேர் சி.ஏ.பி. மற்றும் என்.ஆர்.சி பற்றி குழப்பி கொள்கிறார்கள். என்.ஆர்.சி என்பது மதரீதியான வழிமுறை அல்ல. 1971-ல் ஆரம்பித்த, அசாமியர்களிடையே நடத்தப்பட்ட வேட்டை. அது இப்போது நிறைவடைந்துள்ளது. அது காலனிய கொள்கைகளினால் உருவான ஒன்று என குஷ்புவின் டிவிட்டர் ஹேன்டிலை பதிவிட்டிருந்தார்.

இப்போது உங்களுக்கு தேவை
அதனை பார்த்த குஷ்பு, நான் சொன்னது சரி என்று நிரூபித்துவிட்டீர்கள். நான் சி.ஏ.பி. அல்லது என்.ஆர்.சி பற்றி குறிப்பிட்டேனா? நன்றாக ஓய்வெடுங்கள். உங்கள் மனதுக்குத் தேவைப்படுகிறது என பதிலடி கொடுத்துள்ளார்.

பழையபடி அதிரடி
காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு கடந்த சில நாட்களாக டிவிட்டரில் இருந்து விலகியிருந்தார். அண்மையில் மீண்டும் டிவிட்டரில் இணைந்த அவர் வழக்கம் போல அரசியல் விவகாரங்களில் அதிரடி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











