23வது திருமண நாள்.. 4 புகைப்படங்களில் முழு வாழ்க்கையை சுருக்கிய குஷ்பூ.. க்யூட் நினைவலைகள்!
சென்னை : நடிகை குஷ்பூ, பாலிவுட்டில் தி பர்னிங் ட்ரெயின் படத்தின்மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். இந்த படத்தில் அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
தொடர்ந்து பாலிவுட்டில் மட்டுமில்லாமல் தென்னிந்திய மொழிப் படங்களிலும் சிறப்பான பல படங்களை கொடுத்துள்ளார் குஷ்பூ.
இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்துக் கொண்ட குஷ்பூவிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

நடிகை குஷ்பூ
நடிகை குஷ்பூ, 1980ம் ஆண்டில் வெளியான பாலிவுட் திரைப்படமான தி பர்னிங் ட்ரெயின் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து கடந்த 1988ம் ஆண்டில் தமிழில் வெளியான தர்மத்தின் தலைவன் படத்தில் பிரபு ஜோடியாக நடித்து சிறப்பான வரவேற்பை பெற்றார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த், சுஹாசினி உள்ளிட்டவர்களும் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் குஷ்பூவின் துறுதுறு நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அடுத்தடுத்த மொழிப் படங்கள்
தொடர்ந்து தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என அடுத்தடுத்த மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பல ஹிட்களையும் கொடுத்துள்ளார் குஷ்பூ. கொழுக் மொழுக் என்று இருந்த குஷ்பூவிற்கு தென்னிந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் காணப்பட்டனர். தற்போதும் இந்த எண்ணிக்கை குறையாமல்தான் உள்ளது. குஷ்பூவிற்கு கோயில் கட்டிய தமிழக ரசிகர்கள், அவருடைய பெயரை ஒரு இட்லிக்கும் வைத்து அழகுப் பார்த்தனர்.

சுந்தர் சி-குஷ்பூ காதல் திருமணம்
இந்நிலையில் இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட குஷ்பூ தமிழ்நாட்டு மருமகளானார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் தயாரிப்பிலும் மற்றொருவர் நடிப்பிலும் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இன்றைய தினம் தன்னுடைய 23வது திருமண நாளையொட்டி இன்ஸ்டாகிராமில் குஷ்பூ 4 புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் தன்னுடைய வாழ்க்கையே அடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

திருமண நாள் பதிவு
இதில் முதலில் நடிகையாகவும் இயக்குநராகவும் இருந்த காலத்திய புகைப்படம், இருவரும் காதலிக்கும்போது எடுத்த புகைப்படம், திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் சமீபத்திய புகைப்படங்கள் என 4 புகைப்படங்கள் காணப்படுகின்றன. தொடர்ந்து தன்னை தானாகவே இருக்க உதவிய சுந்தர் சிக்கு குஷ்பூ நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தங்களுடைய வாழ்க்கையில் எதுவும் மாறவில்லை என்றும், தங்களின் சிறப்பான பயணம் தொடர்ந்து வருவதாகவும் குஷ்பூ குறிப்பிட்டுள்ளார்.

சுந்தர் சி ஒரு வரம்
மேலும் சுந்தர் சியை திருமணம் செய்துக் கொண்டது தனக்கு கிடைத்த வரம் என்றும் தன்னுடன் எப்போதும் இருக்கும் சுந்தர் சிக்கு நன்றி என்றும் தன்னுடைய கேப்ஷனில் குஷ்பூ தெரிவித்துள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருந்த போதிலும் தன்னை நடிகையாக, தயாரிப்பாளராக, சின்னத்திரை நடிகை மற்றும் தயாரிப்பாளராக, ரியாலிட்டி ஷோக்களின் நடுவராக என பல்வேறு தளங்களில் பிசியாக காணப்படுகிறார் குஷ்பூ. இதேபோல நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக பன்முகம் காட்டி வருகிறார் சுந்தர் சி.


Click it and Unblock the Notifications











