ஆதரவளிக்கும் ஒரு வார்த்தை.. அக்கறையுடன் ஒரு பார்வை.. வயநாடு மக்களுக்கு இதுதான் தேவை - குஷ்பு
சென்னை: நாட்டையே உலுக்கி வரும் துயரச் சம்பவமாக இருப்பது வயநாடு நிலச்சரிவுதான். 270க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் இந்த நிலச்சரிவினால் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகையால் எப்போதும் மகிழ்ச்சியாக வண்ணமயமாக காணப்படும் வயநாடு ஜூலை மாதம் 29ஆம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டதுடன், காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து இந்திய ராணுவம், கேரள அரசு, பொதுமக்கள் பிரபலங்கள் என அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதிலும் அவர்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பெரும் துயரத்தில் துணை நிற்கும் விதமாக தமிழ்நாடு அரசு கேரள அரசுக்கு ரூபாய் 5 கோடி நிவாரணமாக வழங்கியுள்ளது. அதேபோல், சினிமா நடிகர்களான விக்ரம் ரூபாய் 20 லட்சமும், நடிகர் சூர்யா, கார்த்தி மற்று நடிகை ஜோதிகா ஆகியோர் இணைந்து ரூபாய் 50 லட்சமும் வழங்கியுள்ளனர். உலகநாயகன் கமல்ஹாசன் ரூபாய் 25 லட்சம் வழங்கியுள்ளார்.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தனது தொண்டு நிறுவனத்தினை முழுமையான நிவாரணப் பணிகளில் களமிறக்கி, அரசுக்கு துணை நிற்கின்றார். இந்நிலையில், நேற்று அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதி மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி வயநாட்டில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார். கடந்த 2019 மற்றும் 2024ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். நிலச்சரிவுக்கு உண்டான வயநாடு, பாதிப்புக்கு உள்ளான பொதுமக்களைப் பார்த்த ராகுல் காந்தி, எனது அப்பாவின் மறைவின்போது ஏற்பட்ட வலியை மீண்டும் உணருவதாக தெரிவித்தார்.

குஷ்பு பதிவு: பிரதமர் மோடி ஏன் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க வரவில்லை என கேள்விகள் எழுந்தது. இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்தவரும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில், " இந்த நேரத்தில் நம் நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுடன் நாம் ஒன்றுபட்டு உடன் நிற்க வேண்டும். அவர்களுக்கு நாம் அவர்களுடன் இருக்கின்றோம் என்ற உணர்வு தேவை. வாழ்க்கை கணிக்க முடியாதது, நீங்கள் நேர்மறையான எண்ணங்களை பரப்ப முடியாவிட்டால், தயவு செய்து வெறுப்பை பரப்பாதீர்கள். நாம் அனைவரும் மனிதாபிமான அடிப்படையில் ஒருவருக்கொருவர் தேவை. இது போன்ற கடினமான காலங்களில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு வார்த்தை, பிடிப்பதற்கு ஒரு கை, அக்கறையுடன் ஒரு பார்வை, நான் கவலைப்படுகிறேன் என்று சொல்ல ஒரு புன்னகை, மற்றும் நான் இருக்கிறேன் என்பதுதான் தேவையானது.

ஒற்றுமையாக இருப்போம்: இந்த இக்கட்டான காலத்தில், சிலர் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக சில வேலைகளை செய்கின்றார்கள். நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றீர்கள் என்பதைப் பாருங்கள், சிந்தியுங்கள். இதைத்தான் நீங்கள் வளர்த்தெடுத்தீர்களா? நீங்கள் வாழும் குமிழிக்கு அப்பாற்பட்டது உலகம். அந்த குமிழியில் நீங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நீங்கள் நினைத்தால், நீங்கள் கனவில் வாழ்கின்றீர்கள். குமிழி விரைவில் வெடித்து உங்களை மறதிக்குள் தள்ளும். இயற்கை அன்னையின் கோபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம், அவர்களுக்கு உதவ முயற்சிப்போம். திகில் மற்றும் வாழ்க்கை மீது விரக்தியை ஏற்படுத்தும் இந்த நேரத்திலாவது நாம் ஒற்றுமையாக நிற்போம்" என பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











