பானுப்பிரியா ஏன் இப்படி மாறிட்டாங்க.. பார்க்கவே கஷ்டமா இருந்தது.. குட்டி பத்மினி வேதனை!
சென்னை: தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 கால கட்டத்தில், முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பானுப்பிரியா. தமிழ் சினிமாவில் இவர் ஜோடி போட்டு நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். தற்போது, சினிமாவை விட்டு விலகி இருக்கும் இவர் குறித்து, குட்டி பத்மினி வீடியோ ஒன்றில் பேசி இருக்கிறார்.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்தவர் நடிகை பானுப்பிரியா,1983 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதி வாசு இயக்கத்தில் வெளியான 'மெல்ல பேசுங்கள்' என்கிற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்திற்கு முன்பு பானுப்பிரியா அறிமுகமாக இருந்தது, இயக்குனர் பாக்யராஜ் இயக்கிய திரைப்படம் ஒன்றில் தான். இப்படத்தின் ஆடிஷனில் கலந்து கொண்ட போது, பாக்யராஜ் பானுப்பிரியா படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

நடிகை பானுப்பிரியா: அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்த பானுப்பிரியாவின் கண் அழகுக்கே ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள். அந்த அளவிற்கு அழகான கண்களை கொண்டவர் பானுப்பிரியா. படத்தில் அதிகளவு கவர்ச்சி காட்டாமல் திரைப்படங்களில் தேவைக்கு கவர்ச்சி காட்டி நடித்து வந்த நடிகை பானுப்பிரியா பரதநாட்டிய கலைஞரான சுமதி கௌசல்யாவின் மகனான ஆகாஸை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். கணவனோடு ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் விவாகரத்து செய்து தன் மகளோடு வாழ்ந்து வரும் இவர் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அழகான நடிகை: பானுப்பிரியா குறித்து குட்டிபத்மினி பேசி உள்ள வீடியோவில், அழகான கண்களைக்கொண்டவர் பானுப்பிரியா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக மட்டும் 155 படத்தில் நடித்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் 5 படத்தில் கதாநாயகியாக நடிப்பதே கஷ்டம். ஆனால் இவர் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படத்தில் நடித்து பெயர் எடுத்தார்.
சீரியலில் நடித்தார்: தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்திக், தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவிக்கும் ஜோடிப்பொருத்தம் பக்காவாக இருக்கும். அடுத்தடுத்து படத்தில் பிஸியாக நடித்து வந்த இவர் மற்ற நடிகைகள் போல, இவரும் காதலில் விழுந்தார். ஆனால், அந்த நடிகர் பல நடிகைகளை காதலித்ததால், இந்த காதலை பானுப்பிரியாவின் அம்மா ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்பு குறைந்ததை அடுத்து, ஏவிஎம் தயாரித்த வாழ்க்கை என்ற சீரியலில் நடித்தார்.
கணவரை பிரிந்தார்: அப்போது, இவரது அம்மாவிற்கும் பானுவிற்கும் பிரச்சனை ஏற்பட்டு, வீட்டை விட்டு வெளியேறி, ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் கொடுத்த வீட்டில் இருந்தார். அப்போது தான் நான், 'மனசே மந்திரம்' தெலுங்கு சீரியல் தயாரித்தேன். அதில் பானுப்பிரியா நடித்திருந்தார். அதன் பிறகு நான் அவரை பார்க்கவே இல்லை, அவர் திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டதாக செய்தி வந்தது. அதன் பிறகு, பானுப்பிரியாவிற்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. அவரின் கணவர் உயிரோடு தான் இருக்கிறாரா இல்லை என்பதுகூட யாருக்கும் தெரியவில்லை.
கஷ்டமாக இருந்தது: இதையடுத்து, நீண்ட நாட்களுக்கு பிறகு, நடிகர் சங்க தேர்தல் நேரத்தில் பானுவை சந்தித்தேன். அப்போது, பானுப்பிரியாவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன், அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி இருந்தார். முகத்தில் ஒரு கவலை, சோகம் என வெறுமையாக இருந்தார். இப்படி பானுப்பிரியாவை பார்க்க எனக்கே ரொம்ப கஷ்டமா இருந்தது, இந்த குழந்தைக்காகத்தான் வாழ்கிறேன் என்று சொன்னதை கேட்டு நான் உடைந்து போனேன் என்று குட்டி பத்மினி அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











