தங்கலான் படப்பிடிப்புக்கு மத்தியில் 5 மருத்துவர்களைச் சந்தித்த மாளவிகா மோகனன்! காரணம் என்ன?
சென்னை: நடிகர் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி திருவேத்து உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தங்கலான். விக்ரம் நடித்த படங்களில் அதிக பொருட்செலவில் உருவான படங்களில் ஒன்றாக இந்த படம் உருவாகியுள்ளது. மேலும் படம் லைவ் சவுண்ட் முறையில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் பின்னணி இசை தொடர்பாக ஜி.வி. பிரகாஷ் குமார் ஏற்கனவே தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அப்போதே ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. ஆகஸ்ட் 15ஆம் தேதி தங்கலான் படம் மட்டும் இல்லாமல் பிரசாந்த்தின் அந்தகன் படம் ரிலீஸ் ஆகின்றது. இந்நிலையில் இன்று அதாவது ஜூலை 24ஆம் தேதி டிமான்டி காலணி 2 படக்குழுவினரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி படத்தினை ரிலீஸ் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு நினைவேந்தல் நடத்தப்பட்டது. அதில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித் ஆளும் திமுக அரசை மிகவும் காட்டமாக விமர்சித்து பேசினார். இதனால் பா. ரஞ்சித்துக்கு நெருக்கடி கொடுக்கவே தங்கலான் படத்திற்கு எதிராக டிமான்டி காலணி 2 படத்தினை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் ரிலீஸ் செய்வதாக பேச்சுக்கள் கோலிவுட் வட்டாரத்தில் பலமாக அடிபடுகின்றது.
புரோமோஷன்: இந்நிலையில் படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக பிரபல தனியார் சேனலுக்கு தங்கலான் படத்தில் நடித்துள்ள நடிகைகளான மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி திருவேத்து இணைந்து பேட்டி கொடுத்தனர். அந்த பேட்டியில் நடிகை மாளவிகா மோகனன் பேசுகையில், "இந்த படத்திற்காக ஒட்டு மொத்த படக்குழுவும் மிகவும் சிரமப்பட்டு உழைத்துள்ளது.
மேக்கப்: எனது கதாபாத்திரம் மிகவும் குரூரமான கதாபாத்திரம் என்பதால், எனக்கான மேக்கப் என்பது மிகவும் பார்த்து பார்த்து செய்யப்பட்டது. குறிப்பாக எனது கதாபாத்திரத்திற்கான மேக்கப் என்பது, தோற்றத்திற்கான மேக்கப், டாட்டூ மேக்கப் (பச்சை குத்தி இருப்பதைப் போன்ற ஒப்பனை) அதன் பின்னர் எனது ஆடைகள் என இதற்கே கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.

குடை கூட இல்லை: படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் ஒரு குடை கூட எங்களுக்குக் கிடையாது. மேக்கப் போடும்போது மிகவும் ஆர்வமாக இருக்கும். நடிக்கும்போதும் மிகவும் ஆர்வமாகவே இருந்தோம். கடும் வெயில் புழுதி குப்பைகளுக்கு மத்தியில் எல்லாம் நடிக்கும்போது எங்களுக்குத் தெரியவில்லை. படப்பிடிப்பை முடித்துவிட்டு, நாங்கள் ஹோட்டலுக்கு திரும்பிய பின்னர்தான் எங்களுக்கே தெரியும் கடும் வெயிலினால் எங்களது உடல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதே.
5 மருத்துவர்கள்: நான் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்காக நான் கண்களில் லென்ஸ் போட்டு நடிக்கவேண்டியதாகப் போனது. இதனால் எனக்கு கண்களில் பார்வை பிரச்னை ஏற்பட்டது. அதேபோல் மேக்கப்பினால் தோல் தொடர்பான பிரச்னை ஏற்பட்டது. முகத்தில் தோல் பிரச்னை ஏற்பட்டது. இவற்றை எல்லாம் சரி செய்ய படப்பிடிப்புக்கு மத்தியில் நான் மொத்தம் ஐந்து மருத்துவர்களைச் சந்தித்தேன்" எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











