Vijay: தொடர்ந்து நடிக்க விஜய் திட்டம்.. ஜன நாயகன் கடைசி படமில்லை.. பாலை வார்த்த மமிதா பைஜூ
சென்னை: நடிகர் விஜய் இன்று அதாவது ஜூன் 22ஆம் தேதி தனது 51வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். தனது கட்சி அறிவிப்பின் போது சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகுவதாக அறிவித்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்நிலையில் விஜய் தனது முடிவினை மாற்றி உள்ளதாக ஜன நாயகன் படத்தில் நடித்து வரும் மமிதா பைஜூ தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சுகள் ஏற்கனவே பொதுவெளியில் அதிகம் விவாதத்தைக் கிளப்பி இருந்ததால் விஜய் கட்சி தொடங்கியது பெரும்பாலும் யாருக்கும் இன்ப அதிர்ச்சியையோ அதிர்ச்சியையோ உருவாக்கவில்லை. தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை தனது கட்சியின் நிர்வாகிகளாக நியமனம் செய்தார் விஜய்.
தவெக சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக ( கட்சி தொடங்குவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னர்) தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் பள்ளிப் பொதுத் தேர்வில் சட்டமன்ற அளவில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியருக்கு கல்வி விருதுகள் வழங்கி வருகிறார். இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தனது கட்சிக்கும் தனக்கும் செல்வாக்கைக் கூட்ட முயற்சித்து வருகிறார். கல்வி விருதுகளில் கலந்து கொள்ளும் பெற்றோர்கள் பேசுகையில் விஜய்யின் அரசியல் கணக்கு சரியாகத்தான் போய்க்கொண்டு இருக்கின்றது என்ற நம்பிக்கையை கட்சியின் மேல்மட்டம் தொடங்கி கடைகோடி தொண்டன் வரை அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

தவெக: விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசையில் இருந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு விஜய் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சிதான். அதே நேரத்தில் விஜய் சினிமாவை விட்டு விலகுகிறேன் எனக் கூறியது ரசிகர் மன்ற உறுப்பினர்கள் தொடங்கி அவரது ரசிகர்கள் வரை அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. திரையுலகிலும் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ரசிகர்கள் தொடங்கி பலரும் விஜய் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், சினிமாவில் மீண்டும் நடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
மமிதா பைஜூ: ஆனால் விஜய் தரப்பில் இருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை. தனது கட்சி மாநாட்டில் பேசும்போது கூட, சினிமாவின் உச்சத்தில் இருந்து மக்களுக்காக வந்துள்ளேன். அந்த சம்பளத்தை வேண்டாம் என உதறிவிட்டு வந்துள்ளேன் என்று எல்லாம் கூறினார். இந்நிலையில் இன்று அவரது பிறந்தநாளில் நடிகை மமிதா பைஜூ தெரிவித்துள்ள தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
விஜய்யின் முடிவு: அதாவது மமிதா பைஜூ தற்போது ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விஜய்யின் கடைசி படம் என கூறப்படுகிறது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் விஜய்யிடம் நடிகை விஜய்யிடம் இதுதான் உங்களது கடைசி படமா எனக் கேட்டுள்ளார். அதற்கு அவரோ, வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே நான் மேற்கொண்டு நடிப்பது குறித்து தீர்க்கமாக முடிவு எடுப்பேன் என கூறியதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











