“ரகசிய திருமணம் செய்து கொண்டோம்”.. 2 வருடங்களுக்குப் பிறகு உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை!
இரண்டு வருடங்களுக்கு முன்பே தனக்கு திருமணம் நடந்து விட்டதாக நடிகை மேக்னா நாயுடு கூறியுள்ளார்.
சென்னை: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தனது காதலரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக நடிகை மேக்னா நாயுடு தெரிவித்துள்ளார்.
தமிழில் சிம்புவுடன் சரவணா, சரத்குமாருடன் வைத்தீஸ்வரன் மற்றும் ஜாம்பவான், வீராசாமி, வாடா உள்பட பல படங்களில் நடித்தவர் மேக்னா நாயுடு. நாயகியாக மட்டுமின்றி, தனுசின் குட்டி, கார்த்தியின் சிறுத்தை போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.
தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது யோகிபாபுவின் தர்மபிரபு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தனது காதலரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார் மேக்னா.

நட்பு காதலானது:
இதுகுறித்து அவர் கூறுகையில், "எனது தந்தை டென்னிஸ் பயிற்சியாளர். அவர் மூலம் போர்ச்சுகீசிய டென்னிஸ் வீரர் லூயிஸ் அறிமுகமானார். என்னை விட அவர் பத்து வயது மூத்தவர். சமூக வலைத்தளம் மூலம் எங்கள் நட்பு தொடர்ந்தது.

ரகசிய திருமணம்:
பின்னர் அது காதலாக மலர்ந்தது. கடந்த 2016 டிசம்பர் 25-ந் தேதி நாங்கள் இருவரும் மும்பையில் இந்து முறைப்படி ரகசிய திருமணம் செய்துகொண்டோம். என் தாயின் பிறந்தநாளில் எங்களது திருமணம் நடைபெற்றது.

மீண்டும் திருமணம்:
எளிமையாக இந்த திருமணம் நடந்தது. அடுத்த வருடம் கிறிஸ்தவ முறைப்படியும் எங்கள் திருமணம் நடக்கும். தேனிலவு இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. சமீபத்தில் எனது கணவரிடம் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போகிறேன் என்றேன். இதைத்தொடர்ந்து எங்கள் திருமணத்தை இப்போது எல்லோருக்கும் தெரியப்படுத்துகிறேன்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

6 ஆண்டு காதல்:
மேலும், திருமணத்திற்கு முன்பு இருவரும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் மேக்னா கூறியுள்ளார். காதல் கணவருடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தற்போது தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











