Nalini on Rajinikanth - ஏனோ பிடிக்கல.. ரஜினி படங்களிலிருந்து தொடர்ந்து வெளியேறிய நளினி
சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) நடிகை நளினி ரஜினிகாந்த் குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
பேருந்து நடத்துநராக தனது வாழ்க்கையை தொடங்கிய ரஜினிகாந்த், சினிமா மீது இருக்கும் ஆர்வத்தால் வேலையை உதறிவிட்டு சினிமா கல்லூரியில் இணைந்து படித்தார். அதனையடுத்து பாலசந்தர் கண்ணில்பட அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் ரஜினியுடன் கமல் ஹாசனும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் போராட்டம்: கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிவிட்டதால் அவருக்கான போராட்டங்கள் சினிமாவில் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. ஆனால் ரஜினிக்கு அப்படி இல்லை. ஹீரோவுக்கான முக லட்சணம் இல்லை, கண்கள் சின்னதாக இருக்கிறது, கறுப்பு நிறமாக இருக்கிறார் என பல விமர்சனங்களை சந்தித்தவர்.
அசிங்கப்பட்ட ரஜினி: ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது ரஜினி பட யூனிட்டில் சாப்பிட்டார். அப்போது ப்ரொடக்ஷன் மேனேஜரிடம் இன்னொரு ஆம்லேட் கேட்டார் ரஜினி. அதற்கு அவரோ, கோழி இன்னும் முட்டை போடல. போட்டதும் தரேன் என கூறியிருக்கிறார். இப்படி பல அவமானங்களை சந்தித்திருக்கிறார் ரஜினி. இதனை அவரும் ஏகப்பட்ட மேடைகளில் சொல்லியிருக்கிறார். அதேபோல் ஒரு படத்தில் பணியாற்றியதற்காக சம்பளம் கேட்டபோதும் அசிங்கப்படுத்தப்பட்ட கதையெல்லாம் உண்டு.
தலைவர் ரஜினி: இப்படி பல அவமானங்களையும், போராட்டத்தையும் சந்தித்த ரஜினிகாந்த் தனது திறமையாலும், ஸ்டைலாலும், விடாமுயற்சியாலும் பெரும் வெற்றி கண்டு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அவர் இதுவரை 169 படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர்: ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதனையடுத்து ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்திலும், அதற்கு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் நடிகை நளினி ரஜினிகாந்த் குறித்து பேசியிருப்பது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
நளினி பேட்டி: நடிகை நளினி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், "ரஜினிகாந்த்துடன் ஒரு படத்தில்கூட நான் நடித்ததில்லை. இருந்தாலும் மாவீரன், தங்க மகன், கை கொடுக்கும்கை, தம்பிக்கு எந்த ஊரு ஆகிய படங்களில் முதல் நான் நடித்தேன். ஆனால் பாதியில் விலகிவிட்டேன். அது ஏனோ தெரியவில்லை எனக்கு பிடிக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் நான் ஒரு பைத்தியம்" என ஜாலியாக பேட்டியில் தெரிவித்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் தலைவரோடு நடிப்பதில் அப்படி என்னதான் மேடம் உங்களுக்கு பிரச்னை இருந்தது என கமெண்ட்ஸ் செய்துவருகிறது.
நடிகை நளினி: நளினியை டி.ராஜேந்தர் உயிருள்ளவரை உஷா என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார். அழகாலும், திறமையாலும் தமிழில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்த அவர் நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்ட நளினி தற்போது சின்னத்திரையில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











