Nalini: கணவரை பிரிந்த பிறகு தினமும் அழுவேன்..வாழ்க்கை கொடுத்த குட்டி பத்மினி.. நளினி கண்ணீர் பேட்டி!
சென்னை: தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த நளினி, ஒத்தையடி பாதையிலே என்ற படத்தின் மூலம் முதன்முதலாக சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து, சிவாஜி, பிரபு, விஜயகாந்த், ராமராஜன், சத்யராஜ், மோகன் என அன்றைய காலகட்டத்தில் இருக்கும் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார்.
இவர் நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகிய நளினி தனது குழந்தைகளை கவனித்து வந்தார். இந்த தம்பதிகளுக்கு அருண் மற்றும் அருணா என்ற இரட்டை குழந்தைகள் இருந்த நிலையில், ராமராஜனுக்கும் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்துக்கு பின் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக, மீண்டும் நடிக்க வந்த நளினி, தொடர்ந்து சீரியல் மற்றும் சினிமாவில் நடித்து வருகிறார்.

நளினி பேட்டி: அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், வாழ்க்கையில் கடந்து வந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதில், நான் என் கணவரை பிரிந்த பிறகு கொஞ்ச காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்தேன். அதன் பிறகு வேறு வழியில்லாததால் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் ஒவ்வொரு நாளும் நான் அழுது இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு வந்து எது வேண்டாம் என்று நினைத்து ஒதுங்கி இருந்தேனோ, அதை மீண்டும் செய்வதை நினைத்து அழுது இருக்கிறேன். ஆனால், அந்த நடிப்பு தான் என் குழந்தைகளையும் என்னையும் காப்பாத்துச்சு, இந்த கஷ்டத்தை போய் சொல்வதற்கு கூட, ஆள் இல்லாமல் என்னுடைய கருமாரி அம்மன் கிட்டத்தான் அழுவேன். ஏன் இப்படி பண்ற, நான் வேண்டாம் என்று தானே சினிமாவிட்டு விலகி இருந்தேன்.திரும்ப என்னை ஏன் நடிக்கவைச்ச என்று அழுவேன்.
தங்கமான மனிதர்: மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த போது,டி ராஜேந்திரன் சார் தான் காதல் அழிவதில்லை படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அவர் என்னைப்பார்த்து அழுவார், என்னுடைய ஹீரோயின் உஷாவிற்காக இந்த நிலைமை என்று அழுவார். அவரால் இதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவ்வளவு ஒரு அன்பான இயக்குநர் அவர்,என் மீது ரொம்ப நம்பிக்கை வைத்து இருந்தால், எப்போதும் உன்னால் இதை செய்ய முடியும், ஜெயிக்க முடியும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார் என்றார்.
நன்றி சொன்னால் பத்தாது: அதே போல,இன்றைக்கு நான் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன், என் குழந்தைகள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் குட்டி பத்மினி தான். அவர் தான் எனக்கு கிருஷ்ணதாசியில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதற்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. அந்த சீரியலில் நான் நடித்தபோது குட்டி பத்மினி மற்றும் ரஞ்சிதா இரண்டு பேரும் என்னை குழந்தை போல பார்த்துக்கொண்டார்கள். சீரியலில் முதல் நாள் நடிக்க வந்தேன், நடிக்க முடியாமல் போய்விட்டேன், இரண்டாம் நாள் வந்தேன், ப்ராம்டிங் எனக்கு புதிதாக இருந்ததால் போய்விட்டேன். மூன்றாவது நாள் குட்டிபத்மினி வந்து என்னை அரண் போல பக்கத்திலேயே இருந்து என்னை பார்த்துக்கொண்டார். அந்த கிருஷ்ணதாசி சீரியல் மட்டும் இல்லை என்றால், என்னால், இந்த இடத்திற்கு வந்து இருக்க முடியாது என்று நடிகை நளினி அந்த பேட்டியில் உருக்கமாக பேசினார்.


Click it and Unblock the Notifications











