நிறைய பேசாதீங்க.. செயலில் காண்பியுங்கள்.. விஜய்யை வம்பிழுத்த நமீதா
சென்னை: விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு சில வாரங்களுக்கு முன்பு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதில் கட்சியின் கொள்கைகள், வழிகாட்டிகள் உள்ளிட்டவைகளை பற்றி பேசிய அவர்; தமிழ்நாட்டை ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார். அதனையடுத்து அவருக்கு எதிராக திமுகவினரும் தங்களது காட்டமான கருத்தினை முன்வைத்து வருகிறார்கள். இந்தச் சூழலில் விஜய் குறித்து நடிகை நமீதா பேசியிருக்கிறார்.
விஜய்தான் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் தலைப்பு செய்தியாக இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியிருக்கும் அவர் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் களம் காணவிருக்கிறார். சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் போல் அரசியலிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்திட வேண்டுமென நினைக்கிறார். ஆனால் அந்தத் தாக்கம் வருமா என்பதை காலம்தான் மக்களுக்கு காட்டி கொடுக்கும். சூழல் இப்படி இருக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார்.

அலைமோதிய கூட்டம்: விஜய்க்கென்று தமிழ்நாடு முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே தங்களது தளபதி கூட்டியிருந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லட்சோப லட்சம் பேர் விக்கிரவாண்டியில் குழுமி திகைக்க வைத்தனர். அதனைப் பார்த்த பலரும் இவ்வளவு கூட்டமா என்று வாயை பிளந்தனர். அதேசமயம் மாநாட்டுக்கு வந்த கூட்டம் வாக்குகளாக மாறி விஜய்யை தமிழ்நாடு அரசியலில் பெரும் சக்தியாக உருவாக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
விஜய்யின் பேச்சு: மாநாட்டில் விஜய் பேசுகையில், 'பிளவுவாத சக்திகளும், ஊழல் சக்திகளும் நமது முதல் எதிரி. அவர்களை பாசிசம் என்று இங்கிருப்பவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா’ என்று கேள்வி எழுப்பினார். மேலும் எனது கரியர் உச்சத்தில் இருக்கும்போது அரசியலுக்கு வந்திருக்கிறேன். எனக்கு எதை கண்டும் பயம் இல்லை. கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு, அதிகாரித்திலும் பங்கு என்றெல்லாம் பேசினார். ஆனால் திராவிட மாடலை அவர் கிண்டல் செய்ததால் அவரது பேச்சுக்கு கண்டனங்களும் வலுத்திருக்கின்றன.
திருமாவளவன் கண்டனம்: ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று விஜய் சொன்னாலும் அவர் பாசிசத்தை எதிர்ப்பவர்களை நக்கல் செய்துவிட்டார். மேலும் விழா கால தள்ளுபடி போன்று ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என கூறுகிறார் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவனும் அறிக்கை வெளியிட்டு கண்டனத்தை பதிவு செய்தார். இந்தச் சூழலில் விஜய் குறித்து நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான நமீதா சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
நமீதா பேட்டி: விஜய் குறித்து பேசியிருக்கும் நமீதா, "விஜய்யின் அரசியல் வரவு மகிழ்ச்சியை கொடுக்கிறதுதான். ஆனால் அவர் வீணாக பல விஷயங்களை பேசிக்கொண்டே இருக்கிறார். அப்படி பேசுவது மட்டுமில்லாமல் செயலில் அந்த விஷயங்களை செய்து காட்ட வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். விஜய்யும், நமீதாவும் அழகிய தமிழ் மகன் படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள் என்பது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











