நயன்தாரா, விக்னேஷ் சிவன்… விவேக்கின் மறைவுக்கு உருக்கமான இரங்கல் !
சென்னை : நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் இருவரும் தனித்தனியாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
Recommended Video
நயன்தாரா விஸ்வாசம் படத்தில் உங்களோடு பணியாற்றியது என் மனதில் நிலைத்திருக்கும் என்று கூறியுள்ளார்.
அதேபோல, விக்னேஷ் சிவன், உங்களுடன் பழகிய நினைவுகள், நீங்கள் நட்ட மரங்களைப்போல என்றும் என் மனதில் பசுமையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

திடீர் மரணம்
நடிகர் விவேக் திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து, திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நினைவு எப்போதும் இருக்கும்
அந்த வகையில், நடிகர் விவேக்கிற்கு இரங்கல் தெரிவித்து நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில், விவேக் சாருடன் பணியாற்றிய நினைவுகள் குறிப்பாக விஸ்வாசம் படத்தில் பணியாற்றிய நினைவுகள் எப்போதும் என் மனதில் நிலைத்திருக்கும். மிக விரைவில் சென்றுவிட்டார். நம்பமுடியவில்லை. வாழ்க்கை எவ்வளவு நிச்சயமற்றதாக மாறிவிட்டது என்பதைக் காட்டுகிறது. அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். இந்த இழப்பைத் தாங்கக்கூடிய வலிமையை கடவுள் அவர்களுக்கு வழங்க வேண்டுமென விரும்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

என் வாழ்நாளின் பேரிழப்பு.
இதேபோல இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விவேக் குறித்து உருக்கமான ஒரு பதிவினைப் வெளியிட்டுள்ளார். அப்பதிவில், சமூக சீர்திருத்த கருத்துகளை அழுத்தமாக பேசிய குரல் இனி நம்மிடையே இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. வேலையில்லா பட்டதாரி பட நாட்களில் உங்களுடன் பழகிய நினைவுகள், நீங்கள் நட்ட மரங்களைப்போல என்றும் என் மனதில் பசுமையாக இருக்கும். நாம் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனப் பல சந்தர்ப்பங்களில் பேசியிருக்கிறோம் ஆனால் அது இறுதிவரை நிறைவேறாமல் போனது என் வாழ்நாளின் பேரிழப்பு. இளைப்பாறுங்கள் சின்ன கலைவாணரே என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கோடி மரம்
இதேபோல நடிகர் சிம்புவும் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். விவேக் மறைவை அடுத்து. அவரது ரசிகர்கள் பலரும் மரக்கன்று நட்டு அப்புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். விவேக்கின் ஆசையான ஒரு கோடி மரம் நடவேண்டும் என்ற இலக்கை எட்டும் நோக்கோடு பல தன்னார்வ அமைப்புகளும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications