சுசீந்திரன் இயக்கும் படம்.. திண்டுக்கல்லில் தொடங்கியது ஷூட்டிங்.. சிம்பு ஹீரோயின் இவர்தானாமே!
சென்னை: சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் ஹீரோயினாக ஜெயம் ரவி பட ஹீரோயின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் இயக்குனர் சுசீந்திரன் இரண்டு படங்களை இயக்கி முடித்துவிட்டார்.
ஒரு படத்தில் ஜெய் ஹீரோவாக நடித்துள்ளார். மற்றொரு படத்தில் ஜெய், ஆதி ஹீரோக்களாக நடித்துள்ளனர்.

கிராமத்துப் பின்னணி
இந்நிலையில் இப்போது சிம்பு நடிக்கும் படத்தை இயக்குகிறார். இது குறுகிய கால படம் என்று கூறப்படுகிறது. கிராமத்துப் பின்னணியை கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங், திண்டுக்கல்லில் இன்று காலை தொடங்கியது.

பர்ஸ்ட் காப்பி
டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் வழங்க, பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் சுசீந்திரன் தயாரித்து இயக்குகிறார். இதன் படப்பிடிப்பில் வரும் 8 ஆம் தேதி முதல் சிம்பு கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. 30 நாட்களில் படத்தை முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார்.

நிதி அகர்வால்
இந்நிலையில் இதில் சிம்பு ஜோடியாக, நிதி அகர்வாலை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகை நிதி அகர்வால் லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் பூமி படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்தியில், முன்னா மைக்கேல் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் இவர்.

தமிழ்க் கற்றார்
இந்தியில் அதிக வாய்ப்பு இல்லாததால், தென்னிந்திய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கில், சவ்யாசாச்சி, மிஸ்டர் மஞ்சு, ஐஸ்மார்ட் சங்கர் என்ற படங்களில் நடித்துள்ளார். இவர் இந்த கொரோனா காலகட்டத்தில் தமிழ்க் கற்று வருவதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

மாநாடு ஷூட்டிங்
நடிகர் சிம்பு, இப்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி, கருணாகரன் உள்பட பலர் நடிக்கின்றனர். கொரோனாவால் தடைபட்டுள்ள இதன் படப்பிடிப்பு, அதிகமான நட்சத்திரங்கள் பங்கேற்க வேண்டும் என்பதால், நவம்பரில் மீண்டும் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











