கள்ளக்காதலரின் மனைவி கொலை-கைதாகிறார் நடிகை நிலா

நடிகை நிலாவுடன் இருந்த கள்ளத்தொடர்பால் தனது தங்கை ருச்சியை அவரது கணவர் கொலை செய்து விட்டார் என்று ஹரியானா மாநிலம் குர்காவ்னைச் சேர்ந்த ருச்சியின் சகோதரி ஷெபாலி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து நிலாவைக் கைது செய்ய போலீஸார் விரைந்துள்ளனர்.
குர்காவ்னைச் சேர்ந்தவர் ருச்சி (28). அவரது கணவர் சுமித் புட்டன். இருவரும் ஏஞ்சல் புரோகரேஜ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 6ம் தேதி ருச்சி தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த குர்காவ்ன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ருச்சியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் ருச்சியின் கணவர் சுமித் தான் அவரைக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று சுமித் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து ருச்சியின் சகோதரி ஷெபாலி கூறுகையில், சுமித் ருச்சியைக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டுள்ளார். சுமித்துக்கும், நடிகை பிரியங்கா சோப்ராவின் ஒன்றுவிட்ட சகோதரியும், நடிகையுமான மீரா சோப்ராவுக்கும் (நிலா) கள்ளத்தொடர்பு உள்ளது.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ருச்சிக்கும், சுமித்துக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த நாளில் இருந்தே சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் சுமித்தும், அவரது குடும்பத்தாரும் ருச்சியைக் கொடுமைப்படுத்தி வந்தனர். இவ்வாறு சித்ரவதை செய்து கொண்டே இருந்தால் ருச்சி விவாகரத்து வாங்கிக் கொண்டு சென்றுவிடுவார் என்பது அவர்கள் எண்ணம்.
அவர் இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன் எங்கள் தாயாருடன் போனில் பேசியுள்ளார். தன்னை குர்காவ்னில் இருந்து அழைத்துச் செல்லுமாறு கெஞ்சியுள்ளார் என்றார்.
இந்த சம்பவம் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
வரதட்சணைக் கொலை மற்றும் கிரிமினல் சதி செய்ததற்காக சுமித்தை இபிகோ பிரிவு 304 பி மற்றும் 120 பி ஆகியவற்றின் கீழ் கைது செய்துள்ளோம். இந்த வழக்கின் அடுத்த முக்கிய குற்றவாளியான மீரா சோப்ராவை கைது செய்ய போலீ்ஸ் படை டெல்லி விரைந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
ருச்சி இறப்பதற்கு முன்பு அவருடன் வாக்குவாதம் செய்ததாக ஒப்புக் கொண்டாலும், அவரைத் தான் கொல்லவில்லை என்கிறார் சுமித். மேலும் அவர் கூறுகையில், வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி எனக்கும், எனது மனைவிக்கும் இடையே சுமூகமான உறவு தான் இருந்து வந்தது. கடந்த வாரம் எங்கள் புரோக்கரேஜ் ஹவுஸ் பெருத்த நஷ்டம் அடைந்தது. அந்த நஷ்டத்தால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றார்.
சமீபத்தில்தான் தனக்கு ஒருவர் ஆபாச இமெயில்களை அனுப்பி வருவதாக டெல்லி சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்திருந்தார் நிலா என்பது நினைவிருக்கலாம். தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களி்ல நடித்து வந்த நிலா, பின்னர் வாய்ப்பு குறைந்ததால் டெல்லி போய் செட்டிலாகி விட்டார். தமிழில் இவர் எஸ்.ஜே.சூர்யா மூலம் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











