ஆன் லைன் மோசடியில் சிக்கிய சீரியல் நடிகை.. வங்கி கணக்கில் இருந்து பணம் அபேஸ்!
சென்னை: சின்னத்திரை நடிகையான நிலானி, ஆன் லைன் மோசடியில் சிக்கி பணத்தை பறிகொடுத்துள்ளார்.
இதயத்தைத் திருடாதே, தென்றல் உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ள நிலானி. காதலும் கடந்து போகும், நெருப்புடா, ஓம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

சீரியல் மூலம் பிரபலமாகாத இந்த நடிகை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில், துப்பாக்கியால் சுடப்பட்டதை கண்டித்து போலீஸ் சீருடையில் வீடியோ வெளியிட்டு பிரச்சனையில் சிக்கி பின் கைது செய்யப்பட்டார்.
நடிகை நிலானி: இந்நிலையில், நடிகை நிலானி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், போன் மூலம் கடன் அழைப்பு ஒன்று வந்ததாகவும், அதில், குறைந்த வட்டிக்கு கார் லோன் தருவதாக சொன்னார்கள். நான் வட்டி எவ்வளவு, எத்தனை மாதம் என அனைத்தையும் விசாரித்தேன்.
சிக்கிய நடிகை: அப்போது, சரியான வட்டி மற்றும் ஈஎம்ஐ சொல்ல வேண்டும் என்றால், லாக் இன் பண்ணால்தான் சொல்ல முடியும் என்று கூறினார். இதை நம்பி நானும் லாக் இன் செய்ய சம்மதித்தேன். ஆனால், அவர் சொன்ன வட்டி தொகை அதிகமாக இருந்ததால் தனக்கு கார் லோன் வேண்டாம் என்று சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டேன்.

பணம் அபேஸ்: அதன் பிறகுதான் ஒரு மாதம் கழித்து, ரூ. 8.80 லட்சம் கிரெடிட் ஆகி விட்டதாகவும், அதற்கான வட்டி தொகை 10,998 ரூபாய் கட்டுங்கள் என்று மெசேஜ் வந்ததாகவும், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நிலானி நிதி நிறுவன மேலாளரை தொடர்பு கொண்ட போது அவர் மிரட்டியுள்ளார். பின்னர் நிலானியின் வங்கி கணக்கிலிருந்து அந்த ஆன் லைன் மோசடி நிறுவனம் 10,998 ரூபாய் எடுத்துள்ளனர்.
உஷார்: கார் லோன் வாங்காமலேயே இது போன்ற நூதன மோசடியை நிதி நிறுவனம் செய்து வருவதாக நடிகை நிலானி குற்றம் சாட்டி நிதி நிறுவனத்தின் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், நிதி நிறுவனத்தில் இருந்து பேசியவரின் ஆடியோ பதிவையும், வங்கி கணக்கு பரிவர்த்தனை ஆவணங்களையும் அவர் புகாருடன் இணைத்து கொடுத்துள்ளார். ஆன் லைன் மோசடி குறித்து எவ்வளவு விழிப்புணர்வோடு இருந்தாலும், மோசடிக்காரர்கள் எப்படியாவது நடுவில் புகுந்து சிந்துபாடிவிடுகிறார்கள். இதனால் பொதுமக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.


Click it and Unblock the Notifications