ஏழு வருட காதல்.. தொழிலதிபரை மணக்கிறார் பிரபல ஹீரோயின்.. பண்ணை வீட்டில் எளிமையான திருமணம்..!
சென்னை: ஏழு வருடமாகக் காதலித்து வரும் தொழிலதிபரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் பிரபல நடிகை.
மம்மூட்டி நடித்து வெளியான படம், 'மாமாங்கம்'. எம்.பத்மகுமார் இயக்கிய இந்தப் படத்தை காவ்யா பிலிம் கம்பெனி சார்பில் வேணு குணப்பிள்ளி தயாரித்திருந்தார்.
மலையாளத்தில் உருவான இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது.

பேஸ்கட்பால் வீராங்கனை
தமிழ்ப் பதிப்புக்கு, இயக்குனர் ராம் வசனம் எழுதினார். இதில், பிராச்சி தேசாய், இனியா, மாளவிகா மேனன், கனிகா உட்பட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் மற்றொரு ஹீரோயினாக நடித்தவர் பிராச்சி தெஹ்லான். டெல்லியை சேர்ந்த இவர், பேஸ்கட் பால் வீராங்கனை. தேசிய அளவிலான போட்டிகளில் தங்கப்பதக்கம் உட்பட பல பரிசுகளை வென்றுள்ளார்.

காதல் திருமணம்
இவர், இந்தி டி.வி.சீரியல் ஒன்றில் நடிகையாக அறிமுகமானர். பின்னர் சில பஞ்சாபி படங்களில் நடித்தார். அடுத்து அதிக வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு மலையாளப் படத்தில் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே அவருடைய காதல் திருமணம், வரும் 7 ஆம் தேதி டெல்லியில் நடக்க இருக்கிறது.

7 வருட காதல்
இதை நடிகை பிராச்சி தெஹ்லான் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, 'நான் ரோகித் சரோஹா என்பவரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறேன். இருவரும் 7 வருடமாகக் காதலித்து வருகிறோம். அவரை எனது உறவினர் திருமணத்தில் முதன் முதலாகச் சந்தித்தேன். சந்தித்த மறுநாளே அவர் தனது காதலை, என்னிடம் சொன்னார். திருமணம் செய்துகொள்ள சம்மதமா? என்று கேட்டார்.

தொழிலதிபர்
பிறகு இருவரும் காதலில் விழுந்தோம். ரோகித், டெல்லியை சேர்ந்த தொழிலதிபர். வன விலங்கு பாதுகாவலராகவும் இருக்கிறார். மிகவும் எளிமையாக எங்கள் திருமணம் நடக்க இருக்கிறது. லாக்டவுன் காரணமாக, 50 பேருக்கு மட்டும் அழைப்பு விடுக்க இருக்கிறோம். காலையில் நிச்சயதார்த்தம். மாலையில் திருமணம் நடக்க இருக்கிறது. திருமணத்துக்கு வருகிறவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்று கூறியுள்ளோம்.

பண்ணை வீட்டில்
உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதால் இந்த ஏற்பாடு. மாஸ்க் அணிந்து வரவில்லை என்றால் அவர்களுக்கு வழங்குவதற்காக அதை நாங்களே ஏற்பாடு செய்துள்ளோம். டெல்லி அருகில் உள்ள பண்ணை வீட்டில் திருமணம் நடக்கிறது. அது விசாலமான இடம் என்பதால் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் பிரச்னை இருக்காது. திருமணத்துக்கான கொண்டாட்டம் நாளையில் இருந்து தொடங்குகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











