குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும்.. ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பேசிய பிரியாமணி!
சென்னை: கேரளாவில் மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது Hema committee report. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த கமிட்டியின் அறிக்கை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளது. நடிகைகள், நடிகர்கள் தங்களது மோசமான அனுபவங்கள் குறித்து அடுத்தடுத்து பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகைகள் ராதிகா, குஷ்பூ, ரஞ்சனி உள்ளிட்டவர்களும் இந்த விஷயத்தில் மௌனம் கலைத்துள்ளனர். தெலுங்கு பட உலகில் நடக்கும் இத்தகைய சம்பவங்களும் வெளிச்சத்திற்கு வர வேண்டும் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். இந்நிலையில் மலையாளத்தில் கமிட்டி அமைக்க அமைக்கப்பட்டது போலவே தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் இத்தகைய கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும் என்று நடிகை பிரியாமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஹேமா கமிட்டி அறிக்கை: கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்தடுத்து நடிகர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக நடிகர் ஜெயசூர்யா மீது ஜாமினில் வெளிவர முடியாத அளவில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது நடிகர் நிவின் பாலி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை தான் சட்டபூர்வமாக அணுகுவேன் என்றும் இது முற்றிலும் பொய்யானது என்றும் நிவின் பாலி விளக்கம் அளித்துள்ளார். கேரளாவில் பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பதை ஹேமா கமிட்டி தன்னுடைய அறிக்கையில் உறுதி செய்துள்ள நிலையில் இந்த விஷயத்தில் மேலும் சில முன்னணி நடிகர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரியாமணி வெளிப்படை: ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து அடுத்தடுத்து நடிகைகள், நடிகர்கள் என பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் கேரளாவின் முன்னணி நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லாலும் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இதனிடையே, பான் இந்தியா நடிகையாக மாறியுள்ள நடிகை பிரியாமணியும் இந்த விஷயத்தில் தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளார். இதுபோன்ற ஒரு குழு அமைக்கப்பட்டது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்கள் தண்டனைக்கு உள்ளாக வேண்டும் என்று பிரியாமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
கசப்பான அனுபவங்கள்: இந்த விஷயத்தில் பலரும் தங்களது கசப்பான அனுபவங்களை பகிர்ந்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள பிரியாமணி, அவர்களது குற்றச்சாட்டு உண்மையா என்பது குறித்து தனக்கு தெரியாது என்றும் ஆனால் அது உண்மை என நிரூபிக்கப்படும் நிலையில் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இதுபோன்ற ஒரு கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்றும் பிரியாமணி கேட்டுக் கொண்டுள்ளார். திரையுலகில் மட்டுமில்லாமல் மற்ற துறைகளிலும் பெண்கள் இது போன்ற பாதிப்பிற்கு உள்ளாகி வருவதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆதாரமே நம்பகத்தன்மையை உருவாக்கும்: இந்த விஷயத்தில் சிலர் ஆதாரம் கேட்பதை சுட்டிக்காட்டியுள்ள பிரியாமணி தற்போது கேமரா போன்கள் அதிகமாக உள்ளதாகவும் அதனால் இத்தகைய ஆதாரங்களை மேற்கொள்வது எளிதானது என்றும் தெரிவித்துள்ளார். ஆதாரத்துடன் சொன்னால் மட்டுமே நம்பகத்தன்மை ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் பெண்கள் மட்டுமில்லாமல் பாதிக்கப்பட்ட ஆண்களும வாய் திறக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே தனக்கு இதுபோன்ற அனுபவம் ஏற்படவில்லை என்றும் பிரியாமணி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











