குடும்பத்துடன் விஜய்யை சந்தித்த ரம்பா! காரணத்தைச் சொல்லி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!
சென்னை: நடிகை ரம்பா சமீபத்தில் தனது குடும்பத்துடன் நடிகர் விஜய்யை சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனால் நடிகை ரம்பா விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகளும், விஜய் வீட்டுக்கு அருகில் ரம்பா வீடு வாங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் விஜய்யைச் சந்தித்ததற்கான காரணத்தை ரம்பா கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இன்றைக்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் அது நடிகர் விஜய். ஒரு படத்திற்கு ரூபாய் 200 கோடி வரை சம்பளம் வாங்குகின்றார் எனக் கூறப்படுகின்றது. இதுவரை தமிழ் சினிமாவில் எந்த நடிகரும் இந்த சம்பளத்தைத் தொடவில்லை. இது மட்டும் இல்லாமல் வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் தேர்தலைச் சந்திக்க தமிழக வெற்றிக் கழகத்தினை உருவாக்கி அதனை நடத்தியும் வருகின்றார்.

இப்படியான நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் தி கோட். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்துவிட்டது. இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மட்டும் நடைபெற்று வருகின்றது. படத்தில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் ரிலீஸ் ஆனது. இதில் முதல் பாடல் விஜய் குரலில் ரிலீஸ் ஆனது. இந்த பாடல் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதேபோல் அவரது 50வது பிறந்த நாளுக்கு ரிலீஸான மெலடி பாடல் உலக அளவில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தினைப் பெற்றது.

தி கோட் அதாவது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் சினேகா இவருக்கு ஜோடியாக நடிக்கின்றார். மேலும், படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விஜயகாந்த் நடித்திருப்பதைப் போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அரசியல்: இந்நிலையில் விஜய் தனது அரசியல் கட்சி தொடங்கியதாக அறிவிப்பு வெளியிட்டபோதே, தற்போது ஒப்புக்கொண்டுள்ள படங்களில் மட்டும் நடித்துவிட்டு, முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்துள்ளார். இதனால் விஜய் தற்போது நடித்துவரும் தி கோட் படம் அவரது 68வது படம் ஆகும். அதேபோல் 69வது படத்தில் நடிக்கவும் அவர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துவிட்டார் என கூறப்படுகின்றது. அதன் அடிப்படையில், தனது 69வது படத்தில் நடித்து முடித்துவிட்டு ஒட்டுமொத்தமாக சினிமாவில் இருந்து விலகவுள்ளார்.

ரம்பா குடும்பம்: இப்படியான பேச்சுகள் அடிபட்டுக்கொண்டு இருக்கும்போது, நடிகை ரம்பா மற்றும் அவரது குடும்பத்தினர் விஜய்யுடன் சந்திப்பு நடத்தினர். இது தொடர்பான புகைப்படங்களை ரம்பா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதில் ரம்பாவின் மகன் ஷிவினை விஜய் தூக்கி தனது இடுப்பில் வைத்துக் கொண்டு இருக்கின்றார். மேலும் அவரது இரண்டு பெண் குழந்தைகளுடனும் ரம்பாவின் கணவருடனும் உரையாடிக்கொண்டு இருக்கும்போது எடுத்த புகைப்படத்தையும் ரம்பா பகிர்ந்திருந்தார்.

விளக்கம் கொடுத்த ரம்பா: நடிகர் விஜய் உடனான நடிகை ரம்பாவின் குடும்பம் சந்தித்தது தொடர்பாக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியானது. குறிப்பாக விஜய்யின் கடைசி படத்தில் அவர் நடிக்கவுள்ளதாகவும் கூட செய்திகள் வெளியானது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகை ரம்பா பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், எனது குழந்தைகள் விஜய்யைப் பார்க்க ஆசைப்பட்டனர்.
லியோ: நான் விஜய்யின் மேனேஜருக்கு தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னேன். உடனே விஜய் நேரம் ஒதுக்கி எனது குழந்தைகளைச் சந்தித்தார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கும் மேலாக அந்த சந்திப்பு நடந்தது. எனது குழந்தைகளுடன் நீண்ட நேரம் பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் அவருடன் நடித்த காலங்களில் மிகக் குறைவாகவே பேசுவார். எனது மகன் லியோ படம் பார்த்த பின்னர் விஜய்யின் ரசிகராக மாறிவிட்டான். அதனால்தான் விஜய்யைச் சந்தித்தோம்.
தைரியமான முடிவு: விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பான செய்தியை நான் கனடாவில் இருந்தபோது பார்த்தேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மிகவும் தைரியமான முடிவு. ஒரு நடிகையாக எனக்கு நடிப்பதில் கிடைக்கும் சந்தோஷம் மற்றவற்றில் கிடைக்காது. எனக்கு ஏற்ப கதாபாத்திரங்கள் வந்தால் கட்டாயம் நடிப்பேன் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











