Thug Life: தக் லைஃப் படத்தை தடை செய்ய கூடாது.. கமல்ஹாசனுக்கு திவ்யா ஸ்பந்தனா ஆதரவு.. அதிலும் ட்விஸ்ட்
பெங்களூரு: தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசிய விஷயம் கன்னட அமைப்பினரால் வேண்டுமென்றே பிரச்னையாக மாற்றப்படுகிறது என்ற பார்வை தமிழ் நாட்டில் உள்ள பல அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் கமல்ஹாசனுக்கு கர்நாடகாவில் நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்நிலையில் நடிகை ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா ஆதரவு தெரிவித்துள்ளார்.
கடந்த 24ஆம் தேதி, சென்னையில் நடைபெற்ற தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று கூறினார். அவர் இந்த விஷயத்தை பேசி சில நாட்களுக்குப் பின்னர் கன்னட அமைப்பினர் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் போஸ்டர்களை கிழித்தார்கள். இப்படி இருக்கும்போது, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் கமல்ஹாசனுக்கு எதிராக கருத்து தெரிவித்தார். பலரும் கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறினார்கள்.

கர்நாடகாவில் கமல்ஹாசனின் பேச்சுக்கு இப்படி எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தமிழ்நாட்டில் பலரும் கமல்ஹாசனின் பேச்சுக்கு ஆதரவாக குரல் கொடுக்க ஆரம்பித்தனர். குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த அன்புமணி ராமதாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலரும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்கள். குறிப்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறுகையில், தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை என்றால், கன்னட படம் ஒன்றுகூட தமிழ்நாட்டில் வெளியாகாது என்று பேசினார்.
அன்பு மன்னிப்பு கேட்காது: கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட அமைப்பினர் பலரும் கருத்து தெரிவிக்க, கமல்ஹாசனோ தனது பாணியில், நான் அன்றைக்கு பேசியது அன்பினால் பேசியது. அன்பு என்றைக்குமே மன்னிப்பு கேட்காது என்று கூறி, தனது படத்தின் புரோமோஷன் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். கமல்ஹாசனின் இந்த பதிலுக்கு பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்தனர்.
படம் ரிலீஸ் ஆகாது: கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு கமல்ஹாசனின் இந்த விளக்கத்திற்குப் பின்னர், கமல்ஹாசன் என்ன விளக்கம் சொன்னாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே கர்நாடகாவில் படம் வெளியாகும் இல்லை என்றால் படம் வெளியாகாது என்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு நடிகையும் காங்கிரஸ் முன்னாள் எம்.பியுமான ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆதரவா இல்லை எதிர்ப்பா: அதாவது அவரது எக்ஸ் பக்கத்தில் மொழிக் குடும்பம் வரலாறு தொடர்பாக ஒரு வரைபடத்தை பகிர்ந்துள்ளார். மேலும்., " கமல்ஹாசன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்தும் திராவிட மொழிகள் என்று குறிப்பிட்டு தான் அப்படி பேசியுள்ளார் என்று நினைக்கிறேன். நமது மொழிகள் ஒரே வரலாற்றுப் பின்னணியை கொண்டுள்ளது. அவர் பேசியதை மன்னிக்கலாம் என்று பதிவிட்டுள்ளார். அவரது பதிவுக்கு ஒருவர் கமல்ஹாசன் சொன்ன, அன்பு மன்னிப்பு கேட்காது என்று பதிவிட்டார். இதற்கு பதில் அளித்த திவ்யா ஸ்பந்தனா, இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அன்பில் ஈ.கோ என்ற ஒன்று இருக்கவே இருக்காது ஒருவர் எளிதாக மன்னிப்பு கேட்க முடியும்" என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











