TVK: தவெகவுக்கு கூடும் மவுசு.. விஜய் முன்னிலையில் இணைந்த பிரபல நடிகை.. அரசியல் களத்தில் விஜய் கெத்து
சென்னை: நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது ஆண்டு துவக்க விழாவை தனது கட்சி பொறுப்பாளர்களுடன் கொண்டாடி வருகிறார். இன்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால், பாமகவின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி இல்லத் திருமண விழாவிற்கு தனது மகன் ஜேசன் சஞ்சயை அனுப்பி வைத்தார். தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா, பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில், தவெகவில் பிரபல நடிகை இணைந்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய பின்னர் விஜய் மீது மெல்ல மெல்ல விமர்சனங்கள் எழ, ஆரம்பித்தது. இப்போது விஜய் குறித்த விமர்சனங்கள் என்பது பிரதானமாகவே மாறிவிட்டது. மேலும் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு ஆகியுள்ளதால், அரசியல் களத்தில் கத்துக் குட்டியாக உள்ள நிலையிலும் முக்கியமான அரசியல் நிகழ்வுகளில் விஜய்யின் நிலைப்பாடு என்ற கேள்வி தானாக எழுந்து விடுகிறது. அதற்கு காரணம் அவரது சினிமா பிரபலம் தான்.

இப்படியான நிலையில், தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் தனது கட்சிப் பணிகளையும் செய்து வருகிறார். எப்படியாவது ஜூலை மாதத்திற்குள் படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு, தமிழ்நாடு முழுவதும், அரசியல் பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கட்சிப் பொறுப்பாளர்களை நியமிப்பது, அவர்களுடன் ஆலோசனை மேற்கொள்வது என பிஸியாக உள்ளார்.
விஜய்: மற்ற அரசியல் கட்சியில் இருந்து விலகும் பல அரசியல் பிரபலங்கள் அடுத்து, சென்று ஐக்கியமாகும் இடமாக இருப்பது, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்தான். ஏற்கனவே விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைந்தார். அதேபோல் பல கட்சிகளில் இருந்தும் பலர் இணைந்து கொண்டு உள்ளார்கள். இப்படியான நிலையில், அண்மையில் பாஜகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் தவெகவில் இணைந்துள்ளார். இவர் அண்மையில் பாஜகவின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து விமர்சனம் செய்து கட்சியில் இருந்து விலகினார். முன்னர் ஒருமுறை பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்ததால், அவர்களை அடித்துக் கண்டித்ததால் பிரபலமானவர்.
ரஞ்சனா நாச்சியார்: தற்போது, தவெகவின் இரண்டாவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ரஞ்சனா நாச்சியார், தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் பின்னர் அவர் பேசும்போது, எந்த மொழிக்கும் நாம் எதிரி கிடையாது. ஆனால், ஒரு மொழியை திணிக்கும் போது அதனை எப்படி ஏற்க முடியும். அதனால்தான் பாஜகவில் இருந்து விலகினேன். இனிமேல் எனது அரசியல் கொள்கைகள் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளாகத் தான் இருக்கும்.
தவெக:மேலும் தமிழக வெற்றிக் கழகம்தான் தமிழ்நாட்டின் வெற்றிக் களமாக மாறவுள்ளது. அதனை தமிழ்நாட்டு மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள். களம் ரொம்பவே சூடாக தான் இருக்கப்போகிறது. இன்னும் 10 மாத காலத்திற்கும் தமிழ்நாடு அரசியல் களம் தேர்தலை நோக்கி நகர உள்ளதால், அரசியல் களம் சூடாகத்தான் இருக்கப்போகிறது. பெண்களுக்கான பாதுக்காப்பிலும் வளர்ச்சியிலும் தளபதி விஜய் கவனம் செலுத்துவார் என்ற நம்பிக்கை பலருக்கும் உள்ளது. அதில் நானும் அங்கம் வகிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தவெகவில் இணைந்துள்ளேன்" என பேசினார்.


Click it and Unblock the Notifications











